சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரணைதீவு மக்கள் இன்று மூன்றாவது நாளாகவும் இரணைதீவில் தங்கியுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை (23) வெள்ளைக்கொடியுடன் இரணைதீவுக்கு சென்ற மக்கள் அங்கு அமைந்துள்ள இரணைமாதா தேவாலயத்தில் தங்கியிருது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்றுடன் மூன்றாவது நாளாகவும் தங்கியுள்ளனர்.
இதேவேளை, குறித்த மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
தாம் அங்கு செல்லும் போது கடற்படையினர் எதிர்ப்பு தெரிவிப்பர் என எண்ணியிருந்த போதிலும், தமக்கு கடற்படையினரால் எவ்வித எதிர்ப்புக்களும் ஏற்படுத்தப்படவில்லை என தெரிவித்தனர்.
இரணைதீவுக்கு சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடிய பின் கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன்,
தமது பூர்வீக மண்ணுக்கு மீள திரும்பி வந்துள்ள இம்மக்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேவேளை மக்களின் குறைகளை கேட்டறிய இதுவரை மாவட்டச் செயலரோ, வேறு அதிகாரிகளோ அங்கு செல்லவில்லை. இங்கு அதிகமாக பெண்களே தங்கியுள்ளமையால் அவர்களுக்கான அடிப்படை தேவைகள் பல உள்ளன எனவும் தெரிவித்தார்.
இதேவேளை மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் இயக்குனரும், சட்டத்தரணியுமான இரட்ணவேல் கருத்து தெரிவிக்கையில்,
குறித்த பகுதியில் இருந்த வீடுகள், திட்டமிட்டு மக்கள் மீண்டும் வாழ முடியாத அளவுக்கு அழிக்கப்பட்டுள்ளது. பயன்தரும் மரங்கள் மனித செயற்பாட்டினால் அழிக்கப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. மீள தமது முயற்சியினால் குறித்த பகுதியில் தஞ்சமடைந்துள்ள இந்த மக்களுக்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதேவேளை வைத்தியசாலை, பாடசாலை, விடுதிகள் உள்ளிட்ட அனைத்தும் மீள அபிவிருத்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .