2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

1.5 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்

R.Tharaniya   / 2025 நவம்பர் 18 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக கடத்திச் செல்வதற்கு இராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ.4.50 கோடி மதிப்புள்ள 1 கிலோ 500 கிராம் எடை கொண்ட ஐஸ் போதைப்பொருள் எஸ்.பி பட்டினம்  அருகே வைத்து தனியார் பேருந்தில் இருந்து  செவ்வாய் (18) அன்று காலை சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளான தனுஷ்கோடி, மரைக்காயர் பட்டினம், வேதாளை, களிமண்குண்டு, தேவிபட்டினம், தொண்டி உள்ளிட்ட கடற்கரை பகுதியில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக  இலங்கைக்கு கஞ்சா, ஐஸ் போதைப்பொருள், சமையல் மஞ்சள், கடல் அட்டை, செருப்பு, பீடி இலை பண்டல்கள், பூச்சிக்கொல்லி, உரம், அழகு சாதன பொருட்கள்  உள்ளிட்டவைகளை சமீப காலமாக  அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது.

இந்த கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்காக இந்திய ,இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் கடற்கரை ஓரங்களில் கடத்தல் சம்பவங்களை மரைன் பொலிஸார், சுங்கத்துறை,  உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில், பாதுகாப்பு துறை அதிகாரிகளின் கண்காணிப்பையும் மீறி போதை பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக ஐஸ் போதைப்பொருள் கடத்தப்பட இருப்பதாகவும், ஐஸ் போதைப்பொருள் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு தனியார் பேருந்தில் கொண்டு வர இருப்பதாகவும்  இராமநாதபுரம் சுங்கத்துறை துணை ஆணையருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் இராமநாதபுரம்  கிழக்கு கடற்கரை சாலையில் மீமிசல், எஸ் .பி பட்டினம்,தொண்டி, மோர் பண்ணை, தேவிபட்டினம், காரங்காடு உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை(18) அன்று தீவிர கண்காணிப்பில்  ஈடுபட்டு வந்தனர்.

அப்போது மீமிசல் பேருந்து நிலையத்தில் இருந்து தொண்டி நோக்கி வந்த தனியார் பேருந்தை  எஸ் பி பட்டினம்  அருகே வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பேருந்துக்குள் சோதனை செய்தபோது பயணிகள் அமரும் இருக்கைக்கு கீழே கேட்பாரற்ற நிலையில் கிடந்த பேக் ஒன்றை எடுத்து சோதனை செய்தபோது அதில் ஐஸ் போதைப் பொருள் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் பேருந்தில் இருந்த பயணிகளிடம் அந்த பை குறித்து விசாரித்த போது யாரும் அந்த பைக்கு உரிமை கோராததால் பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் இருவரையும் இராமநாதபுரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டு ஐஸ் போதைப்பொருளை இராமநாதபுரம் சுங்க அலுவலகத்திற்கு எடுத்து வந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த ஐஸ் போதை பொருளை எடையிட்டு பார்த்த போது  அதில் 1 கிலோ 500 கிராம் ஐஸ் போதைப்பொருள்  இருந்துள்ளது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.4.50 கோடி என  சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துடன்  தொடர்புடைய  நபர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

எஸ்.ஆர்.லெம்பேட்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X