2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பலம் குறையவில்லை

Freelancer   / 2023 ஜனவரி 13 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

தமிழரசுக் கட்சி வெளியேறினாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்கள் மீள இணைந்துள்ளமையால், இந்தக் கூட்டு பலமடைந்துள்ளது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், டெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிலுள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) அலுவலகத்தில் நேற்று முன்தினம் (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இறுதியாக மூன்று கட்சிகள் இணைந்து பயணித்தன. நானும், சித்தார்த்தனும் கட்சி ரீதியாக தமிழரசு கட்சிக்கு கடிதம் எழுதினோம். ஏனைய கட்சிகளையும் அரவணைத்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தி, அதனூடாக நாங்கள் எல்லோருக்கும் வலுவான ஒற்றுமையாக இருப்பதாக காட்ட முடியும். மக்களது அபிலாஷைகளை வென்றெடுக்க முடியும் என்று அதில் குறிப்பிட்டிருந்தோம். 

ஆனால், அந்த கடிதத்துக்கான பதில் வருவதற்கு முன்னர், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடுகின்ற முடிவை எடுத்திருந்தார்கள். அந்தவகையில், நாங்கள் வைத்த கோரிக்கைக்கு பதில் தராது, வெளியில் செல்லும் நிலையை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

கூட்டமைப்பில் இருந்து வெளியே சென்ற கட்சிகளில் உள்ளே வரவேண்டும் என கருதிய கட்சிகள் எல்லோரும் அணிதிரண்டுள்ளோம். குறிப்பாக இந்தச் சந்தர்ப்பத்தில்  கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் எமது கூட்டில் இணைய வேண்டும் தமிழ் மக்களின் பிரச்சினையை வென்றுறெடுப்பதற்கு, நாங்கள் பலமான கூட்டாகப் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும். அதனடிப்படையில் இந்தக் கூட்டில் வந்து இணைய வேண்டும் என அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்தக்கூட்டு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட நோக்கத்தின் அடிப்படையில் செயற்படும். கூட்டமைபில் இருந்து ஒரு கட்சி விலகிச் சென்றாலும், கூட்டமைப்பு சிதைவு பட முடியாது. மக்கள் எமது பக்கம் இருப்பார்கள். 

இந்தத் தேர்தல் முடிந்த பின்னர் சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்ட கட்டமைப்பை உருவாகின்ற, தொடர்சியான தலைமைத்துவத்தை கொண்டிருக்கின்ற, மக்களது ஆலோசனைகளைப் பெறுகின்ற செயற்பாடுகளை செய்ய இருகின்றோம். சுழற்சி முறையில் தலைமைத்துவம் பேணப்படும். பொது சின்னம் தெரிவு செய்யப்படும். தற்போது பொது சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .