2025 ஒக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை

ரூ.3 லட்சம் பெறுமதியான 1200 கிலோ மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 15 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு கடத்துவதற்காக உச்சிப்புளி அடுத்தசல்லித் தோப்பு கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய மதிப்பில் ரூ.3லட்சம் பெறுமதியான 1200 கிலோ சமையல் மஞ்சள் மூட்டைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராமநாதபுரம் கடற்கரை இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை ஊடாக இலங்கைக்கு கஞ்சா,சமையல் மஞ்சள்,கடல்குதிரை,கடல் அட்டை உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது.

இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் கடத்தப்பட்டு வருவதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து கடத்தல் சம்பவங்களை தடுத்து நிறுத்தி பொருட்களை பறிமுதல் செய்ததுடன் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்துவருகின்றனர். 

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை(14) அன்று மதியம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியதகவலின் அடிப்படையில் உச்சிப்புளி அருகே களிமண் குண்டு அடுத்த சல்லித்தோப்பு கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமாக கடற்கரை ஓரம் கிடந்த மூட்டைகளை சோதனை செய்ததில் அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக சமையல் மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து 28 மூட்டைகளில் இருந்த சுமார் 1200 கிலோ எடை கொண்ட சமையல் மஞ்சள் மூட்டைகளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

பறிமுதல் செய்யப்பட்ட சமையல் மஞ்சள் இந்திய மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் எனவும்,மீனவர்கள் பொதுமக்கள் கடத்தல் சம்பவங்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுங்கத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .