2026 மார்ச் 03, செவ்வாய்க்கிழமை

மூனசிங்கவால் கட்சிகளுக்குக் கிடுக்குப்பிடி?

Editorial   / 2017 ஒக்டோபர் 23 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளினதும் முக்கிய தலைவர்களின் பிரஜாவுரிமைகள் பற்றிய விவரங்களைக் கோருவதற்கு, தேர்தல் ஆணைக்குழு முடிவெடுத்துள்ளது எனத் தெரியவருகிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ஷாலிலா மூனசிங்க, வெளிநாட்டுப் பிரஜாவுரிமை கொண்டவர் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.   

இது தொடர்பாக ஆராய்வதற்கு, தேர்தல் ஆணைக்குழு, அண்மையில் ஒன்றுகூடியிருந்தது என்று தெரிவிக்கப்படுகிறது.   

மூனசிங்க, இலங்கையின் அரச நிறுவனமான லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்ததோடு, பணச்சலவைக் குற்றச்சாட்டின் கீழ், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.   

இது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளின் போது, புதிய ஜனநாயக முன்னணியின் தலைவராக அவர் இருந்ததோடு, அவர் வெளிநாட்டுப் பிரஜையாக உள்ளார் எனவும் வெளிப்படுத்தப்பட்டது.   

இது தொடர்பாக நீண்டநேரம் ஆராய்ந்த தேர்தல் ஆணைக்குழு, இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளினதும் முக்கிய தலைவர்களினதும் செயற்குழு உறுப்பினர்களினதும் பிரஜாவுரிமை விடயங்களைக் கோருவதற்கு முடிவெடுத்துள்ளது.   

இவ்விடயம் தொடர்பாக, தேர்தல் ஆணைக்குழுவுக்கு நெருக்கமான தகவல் மூலமொன்று கருத்துத் தெரிவிக்கும் போது, தற்போதைய சட்ட ஏற்பாட்டின்படி, வெளிநாட்டவர் ஒருவர், கட்சியின் முக்கிய பொறுப்பிலிருப்பது தடைசெய்யப்படவில்லை என்று தெரிவித்தது. எனினும், இவ்விடயத்தில் உணர்வுரீதியான பிரச்சினை காணப்படுகிறது என்பதை, அத்தகவல் மூலம் ஏற்றுக் கொண்டது.   

இலங்கையில் தற்போது, 70 அரசியல் கட்சிகள் பதிவுசெய்யப்பட்டுக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.    

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .