2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

3 கேள்விகளும் இவ்வாறே கசிந்தன; பொத்தானில் கமெரா, காலில் சுவிட்ச்;

Editorial   / 2017 ஓகஸ்ட் 29 , மு.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற, கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில், இரசாயனவியல் பரீட்சையின் போது, கேள்விகள் மூன்று கசிந்த விவகாரம், பொலிஸ் விசாரணைகளின் ஊடாக அம்பலமாகியுள்ளது.   

கேள்விகளைக் கசியவிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பாடசாலைப் பரீட்சார்த்தியான மாணவனுக்கு, இரசாயனவியல் பாடத்துக்கு மேலதிக வகுப்புகளை எடுக்கும் ஆசிரியரே உதவிசெய்துள்ளார் என்பதும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.   

பாதத்திலிருந்து தொழிற்படும் இயந்திர உபகரணத்தின் உதவியுடனேயே, அந்த கேள்விக்கான புகைப்படத்தை, தன்னுடைய வீட்டிலிருக்கும் கணினிக்கு, மாணவன் அனுப்பிவைத்துள்ளான்.   

தன்னுடைய சட்டையின் பொத்தானில் பொருத்தப்பட்டிருந்த கமெராவின் ஊடாகவே, அந்த வினாத்தாளின் புகைப்படத்தை அம்மாணவன் அனுப்பிவைத்துள்ளான்.   

மாணவனின் வீட்டிலிருந்த இரசாயனவியல் பாட மேலதிக வகுப்பாசிரியரும் மற்றும் உயிரியல் விஞ்ஞான பாட மேலதிக வகுப்பாசிரியரும் அந்தக் கேள்விகளுக்கான விடைகளைச் சொல்லிக் கொடுத்துள்ளனர்.   

அந்த விடைகளை, தன்னுடைய காதில் பொருத்தியிருந்த கேட்கும் கருவியின் ஊடாகக் கேட்டு, கேள்விகளுக்கு மாணவன் பதிலளித்துள்ளான் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.   

அந்த உபகரணங்கள் 900 அமெரிக்க டொலருக்குக் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன (இலங்கை ரூபாய் பெறுமதியில் ஒரு இலட்சத்து 37 ஆயிரத்து 700) ஆகும் என்றும் அறியமுடிகிறது.   

மாணவனின் தந்தை, பொலிஸ் வைத்தியசாலையில் வைத்தியர் என்றும், தன்னுடைய கடனட்டையின் ஊடாகவே, அதற்கான கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளது. எனினும், அந்த உபகரணங்களை இன்னும் தேடி கண்டுப்பிடிக்க முடியவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   

அந்தப் பரீட்சைக்கு முன்னர், மேலதிக வகுப்பாசிரியர்கள் இருவரும், பொரளை கொட்டா வீதியில் உள்ள வைத்தியரின் வீட்டுக்கு வந்து, இந்தச் செயற்பாடு தொடர்பில் பயிற்சிகளை எடுத்து செய்து பார்த்துள்ளனர்.   

மாணவன், அந்த வீட்டின் மேல் மாடிக்குச் சென்று, ஒத்திகையாக, கேள்வித் தாளொன்றுக்கு விடையளித்துள்ளார். அதாவது, அந்த உபகரணங்களை பயன்படுத்தி, கீழ்மாடியில் உள்ள தன்னுடைய வீட்டுக் கணினிக்கு, வினாத்தாளின் புகைப்படத்தை அனுப்பியுள்ளார்.   

கீழ்மாடியிலிருந்த மேலதிக வகுப்பாசிரியர்கள் இருவரும், அந்த கேள்விகளுக்கான பதில்களை சொல்லிக்கொடுத்து, அந்த உபகரணங்களின் செயற்பாடுகள் தொடர்பில், இரண்டுடொரு நாட்கள் பயிற்சியெடுத்துள்ளனர் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.   

பரீட்சையின் போது, மாணவனுக்கு விடைகளைச் சொல்லிக் கொடுப்பதற்காக இரசாயனவியல் பாடத்துக்கான மேலதிக வகுப்பாசிரியருக்கு, 10 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றும் அதில், 9 இலட்சத்துக்கு 90 ஆயிரம் ரூபாய், அவருடைய வீட்டிலிருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.  

இரசாயனவியல் மேலதிக வகுப்பாசிரியரின் தந்தை, சகோதரர் மற்றும் எதிர்பார்க்கப்பட்ட கேள்விகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களைத் தயாரித்து அச்சடித்தார் என்று கூறப்படும் நபர் மற்றும் கொழும்பு பிரதான பாடசாலையின் மாணவன் மற்றும் மாணவனின் தந்தை ஆகியோர், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.   

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான இரசாயனவியல் பாடத்துக்கான பரீட்சை கடந்த 19ஆம் திகதியன்று நடைபெற்றது. அதில், பகுதி 2க்கான வினாக்கள் சிலவற்றை உள்ளடக்கிய துண்டுப்பிரசுரங்கள், பரீட்சை நிறைவடைவதற்கு முன்னரே, கம்பஹாவில் விநியோகிக்கப்பட்டன.  

இந்நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.   

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அனைவரும், கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்களை, எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .