2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

முக்கொலைச் சந்தேக நபருக்கு மீண்டும் விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் பச்சிளங்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கோடரியால் கொத்திப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட குடும்பத் தலைவனுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் திங்கட்கிழமை (01) சந்தேக நபரை ஆஜர்படுத்தியபோது, அவரை எதிர்வரும்; 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த 24ஆம் திகதி காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் கந்தையா பேரின்பம் (வயது 56), அவரது மகளான பேரின்பம் விஜித்தா (வயது 24), பிரசாந்தன் சஸ்னிகா (ஒன்றரை வயது) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரான பிரசாந்தன் (வயது 34) என்பவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு, கடந்த முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

சந்தேக நபரின் மனைவியும் குழந்தையும் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது,  எங்கிருந்தோ வந்து வீட்டுக்குள்; புகுந்த சந்தேக நபர், அவர்கள் இருவரையும் கோடரியால் கொத்திக் கொலை செய்துவிட்டு, சடலங்களை வீட்டுக் கிணற்றில் வீசியுள்ளார்.

இவ்வேளையில் அயல் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த விஜித்தாவின் தந்தையான கந்தையா பேரின்பம், தனது மகள் விஜித்தாவினதும் பேரப்பிள்ளையினதும்; அவலக்குரல் கேட்டு ஓடிவந்தபோது, அவரையும் சந்தேக நபர் வெட்டியுள்ளார்.  
வெட்டுக்காயங்களுடன் குற்றுயிராகக் கிடந்த கந்தையா பேரின்பம், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை பயனின்றி மரணமடைந்தார்.

கணவனுக்கும் மனைவிக்குமிடையில் நீண்ட நாட்களாக இருந்துவந்த குடும்பத் தகராறே இந்தப் படுகொலைக்கு மூலகாரணமாக அமைந்துள்ளதென விசாரணையின்போது  தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .