-சுமித்தி தங்கராசா
ஊர்காவற்துறை மற்றும் கரையோர பகுதிகளில் மீட்கப்படும் சடலங்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்பவர்கள் மற்றும் இந்திய மீனவர்களின் சடலங்களாக இருக்கலாம் என யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நந்தன இன்று வெள்ளிக் கிழமை தெரிவித்தார்.
யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது தற்போது கடலில் கரையொதுங்கும் சடலங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது கடலில் கரையொதுங்கும் சடலங்கள் பெரும்பாலும் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்பவர்கள் மற்றும் இந்திய மீனவர்களின் சடலங்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்புவதாக அவர் கூறினார்.
கடந்த ஓரிரு நாட்களின் முன்னர் ஊர்காவற்துறை கடற்பகுதியில் பொலிஸாரினால் மீட்கப்பட்ட சடலங்களில் ஒன்று உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஏனைய இரு சடலங்களும் இணங்காணப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.