2026 பெப்ரவரி 18, புதன்கிழமை

கீரிமலை சொகுசு மாளிகை: இழப்பீடு வழங்க தீர்மானம்

Editorial   / 2019 ஜூலை 02 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்சன்

யாழ். கீரிமலையில் கடற்படை முகாம் மற்றும் சொகுசு மாளிகை அமைந்துள்ள காணியை அளவீடு செய்து காணி உரிமையாளர்களிடம் வழங்குவேன் என உத்தரவாதம் வழங்கியிருக்கும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், சொகுசு மாளிகை உள்ள காணி உரிமைகோரப்படும் பட்சத்தில் இழப்பீடு அல்லது காணிகை வழங்கவும் உத்தரவாதம் வழங்கியுள்ளார்.

கீரிமலை பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான சுமார் 62 ஏக்கர் காணியை கடற்படையினர் தமது ஆளுகைக்குள் வைத்திருக்கின்றனர். இந்த காணிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சொகுசு மாளிகை ஒன்றையும் அமைத்திருந்தனர்.

குறித்த மாளிகை அமைந்துள்ள காணியையும், அதனை சூழவுள்ள காணியையும் உள்ளடக்கி, சுமார் 62 ஏக்கர் காணியை சுற்றுலா அதிகாரசபைக்காக சுவீகரிப்பதற்கு அளவீடு செய்ய முயற்சிக்கப்பட்டது. 

மேற்படி அளவீட்டு நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவிருந்த நிலையில், இன்று தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. 

இந்த கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி 62 ஏக்கர் காணிக்கு 26 குடும்பங்கள் உரிமைகோரும் நிலையில், 20 குடும்பங்களின் தொடர்பு மட்டுமே தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், மிகுதி 6 குடும்பங்களின் தொடர்புகள் தமக்கு கிடைக்கவில்லை. எனவும் பிரதேச செயலக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதன்படி நாளை மறுதினம் குறித்த காணிகளை அளவீடு செய்வதெனவும், அளவீட்டின் போது அடையாளப்படுத்தப்படும் பொதுமக்களின் காணிகள் பொதுமக்களிடமே மீள கையளிக்கப்படும். 

சொகுசு மாளிகை அமைந்துள்ள காணியை எவரும் உரிமை கோரவில்லை எனவும், அதனை யாரும் உரிமை கோரினால், அந்த காணி உரிமையாளர் தனது காணியை தரும்படி கேட்டால் காணியை கொடுப்பதெனவும், இழப்பீடு பெற விரும்பின் இழப்பீட்டை வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையயே வலி. வடக்கு பிரதேசசபை உறுப்பினர் ச.சஜீவன் எழுந்து 4ம் திகதி அளவீடு முடிவடைந்த பின்னர் காணி சுவீகரிக்கப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? என ஆளுநரிடம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தன்னுடைய காலம் இன்னும் 4 மாதங்களுக்கு இருப்பதாக கூறியிருக்கும் ஆளுநர் அந்த காலப்பகுதிக்குள் ஜனாதிபதியுடன் பேசி உரிமைகோரப்பட்ட மக்களுடைய காணிகளை மக்களிடமே மீளவும் கையளிப்பேன் என பதிலளித்திருக்கின்றார்.

இதேவேளை கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்படி 62 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு கடற்படை இணங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X