2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’மக்களுடைய நிலம் தொடர்ந்தும் படையினருடைய கட்டுப்பாட்டில் உள்ளது’

Editorial   / 2019 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகளை 2018ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்துக்குள் மக்களிடம் மீள வழங்குவேன் என ஜனாதிபதி கூறி 9 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான மக்களுடைய நிலம் தொடர்ந்தும் படையினருடைய கட்டுப்பாட்டில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்றய தினம் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது மீள்குடியேற்ற நிலமைகள் குறித்து ஆராயப்படுகையில் கருத்து கூறும் போதே, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

2018ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்துக்கு முன்னர் தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகள் அனைத்தும் மக்களிடமே மீள வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா காலக்கெடு வழங்கினார். அந்த காலக்கெடு நிறைவடைந்து 9 மாதங்கள் கடந்து கொண்டிருக்கும் நிலையிலும் படையினரின் கட்டுப்பாட்டில் சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலம் இருந்து கொண்டிருக்கின்றது.

மேலும், குறிப்பாக பலாலி வீதியின் கிழக்குப் புறமாக பெருமளவு நிலம் தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டிருக்கின்றது. அந்த நிலம் பொதுமக்களுக்குச் சொந்தமான மிக பெறுமதியான விவசாய நிலம் என, அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்விடயம் தொடர்பில், அங்கு தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறுகையில், பலாலி வீதியின் கிழக்கு புறமாக உள்ள வீதி என்பது மிக பெறுமதியான விவசாய நிலம். அதனை மக்களுக்கு விடுவிக்காமல் படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அது மட்டுமல்லாமல் மக்களுடைய நிலத்தில் விவசாயம் செய்கின்றார்கள்.

இது எங்களுடைய பொருளாதார விருத்திக்கு முரணான ஒரு செயலாக அமைகின்றது. அது மட்டுமல்லாமல் மயிலிட்டி பகுதியில் 3 கிராமசேவகர் பிரிவுகளும், வல்லை அராலி வீதியும் விடுவிக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து கருத்து கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண ஆளுநர் ஜனாதிபதியின் வடமாகாணத்துக்கான பிரதிநிதி என்ற அடிப்படையில் ஜனாதிபதியிடம் இந்த விடயங்களை கூறி மக்களுடைய காணிகளை மக்களிடம் மீள வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். அதற்கு பதிலளித்த ஆளுநர் தாம் ஜனாதிபதிக்கு இந்த விடயத்தை நினைவுபடுத்துவதாக கூறினார்.

இதனை தொடர்ந்து யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி கருத்து கூறுகையில், பலாலி வீதியின் கிழக்கு பகுதியில் உள்ள காணிகளை விடுவிக்க 1,200 மில்லியன் பணம் தேவை என கூறியதுடன் அந்த பணம் கிடைக்கவில்லை எனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .