Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Gavitha / 2017 மே 01 , பி.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘போர்க்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தீர்வு, உடனடியாகக் காணப்பட வேண்டும். ஐ.நா தீர்மானத்தில் இணங்கிக் கொண்டதற்கேற்ப, அரசாங்கத்தா ல் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரதும் பெயர்கள் கொண்ட பட்டியல், உடனடியாக வெளியிடப்பட்டு, ஏனைய ஒவ்வொருவரும் சம்பந்தமாக விசாரணை மேற்கொள்வதற்காக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகச் சட்டம் விரைந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பிரகடனத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு தர்மசங்கதி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தின் போது, கிழக்கு மாகாண விவசாய, கால்நடை, மீன்பிடி, நீர்ப்பாசன, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கே.துரைராஜசிங்கத்தினால், இந்தப் பிரகடனம் வாசிக்கப்பட்டது. அந்தப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 15 அம்சக் கோரிக்கைகள் தொடர்பான முழு விவரங்கள் வருமாறு:
1. ஐ.நா மனித உரிமைப் பேரவைத் தீர்மானங்கள் 30/01, 34/01 ஆகியவற்றில் இலங்கையும் பொறுப்பேற்றுக் கொண்ட விடயங்கள் அனைத்தும், முழுமையாகத் துரித கதியில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
2. தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளான சுயநிர்ணய அடிப்படையில் இணைந்த வடக்கு, கிழக்கிலே ஏற்படுத்தப்படும் கூட்டாட்சி முறைமைக்கு, முழுமையான அதிகாரப் பங்கீடு செய்யப்படும் விதமான, அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும் அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும்.
3. புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் முறையில், எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் பாதிப்புறாத வகையிலும், போர்ச்சூழல் காரணமாகக் குறைந்துள்ள தமிழ் மக்களது மக்கள் தொகை, அவர்தம் பிரதிநிதித்துவத்தைக் குறைக்காது, அதனை ஈடு செய்யும் வகையிலும் ஒழுங்குகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
4. போர்க்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தீர்வு, உடனடியாகக் காணப்பட வேண்டும். ஐ.நா தீர்மானத்தில் இணங்கிக் கொண்டதற்கேற்ப, அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரதும் பெயர்கள் கொண்ட பட்டியல், உடனடியாக வெளியிடப்பட்டு, ஏனைய ஒவ்வொருவரும் சம்பந்தமாக விசாரணை மேற்கொள்வதற்காக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகச் சட்டம், விரைந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
5. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். இச்சட்டம் நீக்கப்பட்டு, மாற்றீடாகக் கொண்டு வரப்படவுள்ள சட்டம், சர்வதேச நியமங்களை முற்றாக அனுசரிப்பதாக அமைய வேண்டும்.
6. கடந்த மூன்று தசாப்தங்களில், அரச அடக்கு முறைகளுக்கு ஆட்பட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் கொலைகள் சம்பந்தமான விசாரணைகள், உடனடியாக நடத்தப்பட்டுத் தண்டனை வழங்கப்படுவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களும் வழங்கப்பட வேண்டும்.
7. ஊடகவியலாளர்கள், தமது கடமைகளைச் சுயாதீனமாகவும் பயமின்றியும் செய்யக்கூடிய உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.
8. பாதுகாப்புத் தரப்பினரால், வடக்கு, கிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் மக்களின் நிலங்கள், வாக்குறுதி அளிக்கப்பட்டபடி, காலதாமதமின்றி விடுவிக்கப்பட வேண்டும். இக்காணிகளில், உரியவர்களை மீள்குடியேற்றுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, வீடற்றோருக்கு கல் வீடுகள் கட்டிக்கொடுக்கும் திட்டம் அமுல்படுத்தப்படுவதுடன், அவர்கள் தமது வாழ்வை மீள ஆரம்பிப்பதற்கான வாழ்வாதார வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
9. தமிழ், முஸ்லிம் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த பிரதேசங்களில், புத்தர் சிலைகள் நிறுவும் செயற்றிட்டம், உடனடியாகக் கைவிடப்பட வேண்டும்.
10. வனப் பிராந்தியமாகவும் வனவிலங்குக் காப்பகம் மற்றும் தொல்பொருட் பிரதேசங்களாகவும் பிரகடனப்படுத்தப்படுவதன் மூலம், தமிழ், முஸ்லிம் மக்களின் வாழிடங்கள் ஆக்கிரமிக்கப்படுதல் நிறுத்தப்பட்டு, அவ்விடங்கள் உரிய மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.
11. வடக்கு, கிழக்கில் தொழில் வாய்ப்பற்றுள்ள தமிழ்ப் பட்டதாரிகளுக்கும் ஏனைய இளைஞர், மகளிருக்கும் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். அத்துடன், தொழில் வாய்ப்புக்கேற்ற வகையில், கல்விக் கொள்கை சீரமைப்புச் செய்யப்பட வேண்டும்.
12. முதலீடுகள் மற்றும் தொழிற்துறைகள், வடக்கு, கிழக்கில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், போர் காரணமாக அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்டுள்ள இவ்விரு மாகாணங்களும், விசேட ஏற்பாடுகள் மூலம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
13. முன்னாள் போராளிகள் சமூகத்தில் மீளிணைக்கப்படும் செயற்பாடு, சீரான முறையில் நடைபெற வேண்டும். அவர்களுக்கான வாழ்வாதார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, ஜனநாயக, அரசியல் செயற்பாட்டுக்குள்ளும் அவர்கள் உள்ளீர்க்கப்பட வேண்டும்.
14. விலைவாசிக்கேற்ற சம்பள உயர்வோடு கூட்டுறவாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்களுக்குத் தலைமை தாங்கும் பெண்கள் என்போரின் சம்பள வேறுபாடுகள் சீர்செய்யப்பட வேண்டும்.
15. விவசாயம், மின்பிடி, கால்நடை வளர்ப்போர், சிறு கைத்தொழிலாளர்கள் ஆகியோருடைய வருவாய்கள் தடைப்படாமலும், குறைவுபடாமலும் இருக்க அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
15 minute ago
56 minute ago
1 hours ago