2025 ஜூன் 09, திங்கட்கிழமை

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை கல்முனை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 08 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்,எஸ்.எம்.எம்.றம்ஸான்)

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கல்முனை அலுவலகத்தை, அம்பாறை அலுவலகத்துடன் இணைப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை காலை அமைதி ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.  

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கல்முனை அலுவலகத்துக்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அகில இலங்கை அரசாங்கப் பொது ஊழியர் சங்கம் உள்ளிட்ட அமைப்பின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கல்முனை அலுவலகத்தை, அம்பாறை அலுவலகத்துடன் இணைப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளைக் கண்டித்தும் கல்முனை அலுவலகத்திலிருந்து அம்பாறைக்கு மாற்றப்பட்ட கணக்குப் பிரிவினை மீண்டும் வழங்குமாறும் கோருகின்ற பல்வேறு பதாதைகளை இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் தாங்கியிருந்தனர்.

கடந்த 2003ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கல்முனை அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலகங்களில் 12 தமிழ், முஸ்லிம் பிரதேச செயலகங்களின் நிர்வாக எல்லைகளை உள்ளடக்கியதாக இந்த கல்முனை அலுவலகம் இயங்கிறது.

ஒரு மாவட்ட அலுவலகத்துக்குரிய வசதிகளுடன் இயங்கி வந்த இந்த கல்முனை அலுவலகத்தின் கணக்குப் பகுதியின் ஒரு பிரிவு அண்மையில் அம்பாறை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை காலமும் கல்முனை அலுவலக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென ஒதுக்கப்பட்டு வந்த நிதியானது, இவ்வருடம் அம்பாறை அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஜன செவன 10 இலட்சம் வீடமைப்புத் திட்டம் தொடர்பான சகல நடவடிக்கைகளும் கல்முனை அலுவலகத்திலிருந்து அம்பாறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

கடந்த சுனாமியின்போது வீடுகளை இழந்த மக்களுக்கு, வீடுகளை அமைத்துக் கொடுப்பதில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கல்முனைக் காரியாலயம் - சிறந்த முறையில் செயற்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேற்படி கல்முனைக் காரியாலயம் தற்போது 38 அலுவலர்களுடன் இயங்கி வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .