2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கிழிந்த இதயங்களை குணப்படுத்த மருந்து வேண்டும்

R.Tharaniya   / 2025 மே 20 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முள்ளிவாய்க்கால் பேரவலம் நிறைவடைந்து மே.18 ஆம் திகதியுடன் 16 ஆண்டுகள் கடந்துவிட்டன. வடக்கு,கிழக்கு, கொழும்பு மற்றும் கடல் கடந்த நாடுகளில், நினைவு தினம் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. தங்களுடைய உறவுகளுக்குத் தீப சுடரேற்றி, மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். முள்ளிவாய்க்கால், கண்ணீர் மழையில் நனைந்தது.

தென்னிலங்கையை பொறுத்தவரையில், பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்த நாளாக, மே. 18ஆம் திகதியை அன்றைய அரசாங்கம் அறிவித்தது. தேசிய போர் வீரர்கள் தினமாக, மே 19ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.

தேசிய போர் வீரர்கள் தினம், அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பாதுகாப்புப் படைகளின் பங்குபற்றலுடன் இடம்பெறும். இதனால், எவ்விதமான கெடுபிடிகளும் இல்லை. எனினும், வடக்கு, கிழக்கில், முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுஷ்டிக்கப்படும் போது, கடந்த காலங்களில் கடுமையான கெடுபிடிகள் கடைப்பிடிக்கப்பட்டன.

நீதிமன்ற தடையுத்தரவுகளும் பெற்றுக்கொள்ளப்பட்டன.எனினும், அவ்வாறான எவ்விதமான கெடுபிடிகளும் இம்முறை கடுமையாகக் கடைப்பிடிக்கவில்லை. கொழும்பில் நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு நாளில், ஓரிருவர் இணைந்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், கொட்டியா- டயஸ்போரா என கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். 

 எந்த சூழ்நிலையிலும், ஒரு போரில், சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும், நிராயுதபாணியான பொதுமக்களும் இறக்கின்றனர். இறந்த எந்த ஒரு தரப்பினரையும் நினைவு கூர்வதையோ அல்லது அவர்களுக்காக விளக்கு ஏற்றுவதையோ நாங்கள் தவறாகப் பார்க்கவில்லை. 

ஒருவருக்கு ஹீரோவாகக் கருதப்படும் ஒருவர் இன்னொருவருக்குத் துரோகியாக இருக்கலாம். எனவே, எந்த சூழ்நிலையிலும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைப்பதோ அல்லது இறந்த நபரை நினைவு கூர்வது தவறான செயல் அல்ல என்று நாங்கள் கருதுகிறோம்.

இலங்கையில் போர் முடிந்து கிட்டத்தட்ட ஒன்றரை தசாப்தங்கள் கடந்து விட்ட போதிலும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மன நிலைக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. எத்தனை உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன, எத்தனை சொத்துக்கள் இழக்கப்பட்டுள்ளன, எத்தனை பேர் நிரந்தரமாக ஊனமுற்றுள்ளனர்? அமைதியைக் கொண்டாடும் போது நாம் மறந்துவிடும் சமூக யதார்த்தம் இதுதான்.

இன வேறுபாடின்றி, அனைத்து இனத்தவர்களும் ஒன்றிணையும் சகோதரத்துவ நிலத்தை உருவாக்குவது இந்த நேரத்தில் ஒரு முக்கியமான பணியாக மாறியுள்ளது. அதில், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். கடந்த அரசாங்கங்கள் காலத்தைக் கடத்திச்  சென்றதை போல, புதிய அரசாங்கமும் செவிசாய்க்காமல் இருந்து விடக் கூடாது. 

போரினால் கிழிந்த இதயங்களைக் குணப்படுத்துவது ஒரு அவசரத் தேவையாகும். ஏனெனில் நீதி நிறைந்த எதிர்கால உலகைக் கட்டியெழுப்புவதில் இன சகோதரத்துவம் அவசியம். பொதுவான நினைவுகூரல் தினத்தை அறிமுகப்படுத்துவதாக இந்த அரசாங்கம் அறிவித்திருந்தது. அதற்கான காலம் கனிந்துள்ளது. அதுமட்டுமன்றி, பாதிக்கப்பட்ட சகல தரப்பினருக்கும் நீதியை நிலைநாட்ட வேண்டும். 

20.05.2025


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X