2025 மே 20, செவ்வாய்க்கிழமை

செக்ஸ் புகாரில் சிக்கியவர் மதுரை மடாதிபதியா; தமிழகத்தில் சைவ மடங்கள் திடீர் எதிர்ப்பு

A.P.Mathan   / 2012 மே 07 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


பெங்களூரில் பெண் விவகாரத்தில் சிக்கி சிறையிலடைக்கப்பட்ட நித்யானந்தா இப்போது புகழ் பெற்ற மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக பட்டாபிஷேகம் செய்து வைக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி முதலில் மதுரையில் நடைபெற்ற இந்த பட்டாபிஷேகம் இப்போது மே 6ஆம் திகதி திருவண்ணாமலையில் தடல்புடலாக நடந்து முடிந்திருக்கிறது. இரு மடாதிபதிகளும் எடுத்த இந்த முடிவு சைவத்தைப் போற்றும் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பல இந்து அமைப்புகளும் போராட்டத்தில் குதித்து விட்டன. அரசியல் சலசலப்பு போல் இப்போது தமிழகத்தில் சைவத்திலும் பெரும் கலாட்டா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மதுரை ஆதீனம் அருணகிரி ஞானசம்பந்த ஸ்வாமிகள். இவர் சைவ வேளாளர் சமயத்தைச் சேர்ந்தவர். முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகார பூர்வ நாளேடான முரசொலியில் நிருபராக பணியாற்றி, பிறகுதான் மதுரை ஆதீனம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. 292ஆவது மடாதிபதியாக ஆன அருணகிரி ஞானசம்பந்த தேசிக ஸ்வாமிகள் (மதுரை ஆதீனம்) பொறுப்பேற்றவுடன், "இப்பணியின் புனிதத்தன்மைக்கு ஏற்ப ஆன்மீக பாரம்பரியத்தைக் காப்பாற்றுவேன்" என்று உறுதிமொழி எடுத்தார். ஆனால் இன்று அந்த உறுதிமொழியை காற்றில் பறக்க விட்டு விட்டு, செக்ஸ் புகாரில் சிக்கிய நித்யானந்தா ஸ்வாமியை இளைய மடாதிபதியாக நியமித்துள்ளார். மதுரை ஆதீனம் ஓர் அரசியல்வாதி போல் செயல்பட்டு வந்தவர். சைவ வேளாள சமுதாய மாநாடுகள் எங்கு நடைபெற்றாலும் ஆஜராகி விடுவார். இவர் மடத்திற்கு என்று மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் நிலங்கள் கிடக்கின்றன. ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள இந்த மடத்தின் கட்டுப்பாட்டை "செக்ஸ்" குற்றச்சாட்டில் சிக்கிய நித்யானந்தா எடுத்துக் கொண்டிருக்கிறார். இன்றும் மதுரையில் உள்ள நகைக்கடைகள் பல ஆதினத்திற்கு சொந்தமான இடங்களில்தான் இருக்கின்றன. இவரை "அரசியல் மடாதிபதி" என்றே அழைப்பார்கள். ஏனென்றால் சசிகலாவின் கணவர் எம்.நடராஜனுக்கு மிகவும் நெருக்கமானவர் இந்த ஆதீனம். அவர் நடத்தும் அரசியல் விழா, பொதுவான நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கலந்து கொண்டு அரசியல் பேசுவதை ஆதீனம் தனது வழக்கமாக வைத்திருந்தார். ஒருகாலத்தில் நடராஜன் ஏன் முதல்வராகக்கூடாது என்றெல்லாம் பேசியவர் மதுரை ஆதீனம். நவக்கிரக கோயில்கள் இருக்கும் தஞ்சை மண்டலத்தில் சுக்கிரன் கோவில் இருக்கும் காஞ்சணூர் இந்த மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில். அங்கு முக்கிய விழாக்கள் நடக்கும் போது ஆதீனத்தின் டிஜிட்டல் கட்அவுட்களை பார்க்க முடியும். அது மட்டுமின்றி திருக்கைச்சின்னம், திருப்புரம்பையம், திருமுகத்தலை போன்ற முக்கிய சிவாலயங்களும் மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான். இலங்கை தமிழர் பிரச்சினை வந்தாலும் அதற்காக போராடும் ஆதீனம் இவர். அப்பிரச்சினை உச்சத்தில் இருக்கும் போது கறுப்புச்சட்டை போட்டுக் கொண்டு பிரசாரம் செய்தவர். அப்போது தன்னுடன் இருப்பவர்களிடம், "இலங்கையில் போராடுபவர்களும் எங்கள் சமுதாயத்தினரே" என்று பெருமிதமாகச் சொல்வார். இது தவிர, முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் மதுரையில் முதலியார் சமுதாய மாநாட்டை நடத்தினார். அப்போது, "முதலியார்களும் பிள்ளை சமுதாயத்தினரே" என்று கூறி அந்த மாநாட்டில் பங்கேற்று பேசினார் ஆதீனம். இவரை எங்கு அழைத்தாலும், இவருக்கு என்று மடத்தில் உள்ள சிம்மாசனத்தை தூக்கி்க் கொண்டு போய் அதில்தான் அமர்ந்திருப்பார். "சன்னிதானம் வேறு எந்த நாற்காலியிலும் அமர மாட்டார்" என்று அதற்கு ஒரு விளக்கம் சொல்வார். இதற்காகவே மதுரை ஆதீனம் ஒரு காரில் செல்ல அவருடைய சிம்மாசனம் மட்டும் தனிக்காரில் விழா நடைபெறும் இடத்திற்கு போகும். அவரை யார் போய்ப் பார்த்தாலும், "இந்த மடம் மூத்த மடம். ஆகவே உங்களுக்கு ஞானப்பால் தருகிறேன்" என்று கூறி பால் கொண்டு வந்து கொடுப்பார். மதுரை ஆதீனத்தில் சாப்பிடும் பாலுக்கு "ஞானப்பால்" என்று பெயர் வைத்திருந்தார் மடாதிபதி.

இவரது உயிருக்கு ஆபத்து என்று கருதி மாநில அரசு இவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கியிருந்தது. ஆனால் காலப்போக்கில் அந்த சைரன் காரை வைத்துக் கொண்டு போகுமிடமெல்லாம் ஆடம்பரமாக போகவே, அந்த பொலிஸ் பாதுகாப்பையும் வாபஸ் பெற்றது. இதனால் மிகவும் வெறுத்துப் போன மதுரை ஆதீனம் அவ்வப்போது, "ஏன் நான் அறநிலையைத்துறை அமைச்சராக ஆகக்கூடாதா" என்று அடிக்கடி ஆதங்கப்பட்டுக் கொள்வார். முன்பு முதல்வராக இருந்த கருணாநிதியிடம் "தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வாருங்கள்" என்று திருச்சியில் ஒருமுறை செய்தியாளர்களிடம் சொல்லி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மதுரை ஆதீனத்தின் இளைய சன்னிதானமாக ஸ்வாமிநாதன் என்ற ஒரு சிறுவனை நியமித்தார். ஆனால் அவர் நியமிக்கப்பட்டு சில நாட்களிலேயே அப்பதவியை விட்டு நீக்கினார். அப்படி காலியாக இருந்த இளைய சன்னிதானம் பதவிக்கு இப்போது "செக்ஸ் குற்றச்சாட்டில்" சிக்கி நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருக்கும் நித்யானந்தாவிற்கு பட்டாபிஷேகம் செய்து வைத்துள்ளார் மதுரை ஆதீனம். இதற்காக ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக முதலில் குற்றச்சாட்டு கிளம்பியது. பிறகு மதுரை ஆதீனமே, "அந்த பணம் எனக்கு வழங்கப்பட்ட பாத காணிக்கை. குருவிற்கு இப்படிச் செய்வது மரபுதான்" என்று பதலளித்தார். நித்யானந்தா - நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த படங்கள் வெளியாகி கர்நாடகத்திலும், தமிழகத்திலும் சென்ற 2010 வாக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. நித்யானந்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 2010ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கைது செய்யப்பட்டார். பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் 2010ஆம் வருடம் ஜூன் 11ஆம் திகதிதான் ஜாமினில் வெளிவந்தார். அவர் மீதான கிரிமினல் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

மதுரை ஆதீனத்தின் இளைய சன்னிதானமாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து இந்து இயக்கங்களும், சைவ மடாதிபதிகளும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். தருமபுரம் ஆதீனத்தின் தலைமையில் 12 மடாதிபதிகள் சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்கள். "நித்யானந்தா நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்கள். ஆனால் அதற்கும் மதுரை ஆதீனம் செவிமடுக்கவில்லை. சில இயக்கங்கள் போராட்டம் நடத்தப் போகிறோம் என்று அறிவித்து பிறகு மடத்திற்குள் நுழைந்து திருஞானசம்பந்தர் பாடல்களை பாடி விட்டு வந்தார்கள். ஆனாலும் ஆதீனம் அசருவதாக இல்லை. இப்படியொரு போராட்டத்திற்கு பிறகுதான் திருவண்ணாமலை சென்ற மதுரை ஆதீனம் - நித்யானந்தாவிற்கு இன்னொரு பட்டாபிஷேகத்தை செய்து வைத்துள்ளார். அதே மே மாதம் 6ஆம் திகதி நித்யானந்தாவின் ஆசிரமத்தைச் சேர்ந்த 50 பேர் கொண்ட குழு ஒன்று 1400 வருடத்திற்கும் பழைமை வாய்ந்த மதுரை ஆதீனத்தை கைப்பற்றியது. மெத்தை, கட்டில்களுடன் மதுரை வந்த அந்த குழுவுக்கும், மதுரை ஆதீனத்தின் மனேஜராக இருக்கும் பெண்மணிக்கும் மோதல் வந்து விட்டது என்ற தகவலும் உண்டு. மடத்திற்குள் நுழைந்த நித்யானந்தா குழு சமையல் செய்வதற்கான பாத்திரங்கள் போன்றவற்றை மதுரை ஆதீன மனேஜரிடம் கேட்டிருக்கிறார்கள். அந்த பெண்மணியோ, "மடாதிபதி ஊரில் இல்லை. அவர் வந்து பிறகு தருகிறேன்" என்று கூற, இரு தரப்பிற்கும் மோதல் வெடித்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் மதுரை ஆதீனம் இருக்கும் ஏரியா டென்ஷனாகவே இருக்கிறது. இதுவரை புகார்கள் ஏதும் காவல்துறைக்கு வரவில்லை என்பதால் பொலிஸும் அமைதி காக்கிறது.

நித்யானந்தா இளைய சன்னிதானமாக அறிவிக்கப்பட்டதை பல மடாதிபதிகளும் எதிர்த்து இருக்கிறார்கள். குறிப்பாக காஞ்சி சங்கரா மடம், "இதை நாங்கள் ஆதரிக்கவில்லை" என்று அறிக்கை விடுத்திருக்கிறது. சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அந்த வழக்கில் "மடத்தின் சொத்துக்கள் விடயத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது" என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சைவ மடங்கள் பற்றி நன்கு அறிந்த ஊரான் அடிகள், "நித்யானந்தாவை மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக அறிவித்தது அதிர்ச்சியளிக்கிறது. இதை ஆதீனமே நீக்க வேண்டும். இல்லையென்றால் மடத்தை எடுத்துக்கொள்ள வலியுறுத்தி மாநில அரசிடம் மனு செய்வோம்" என்று அறிவித்துள்ளார். அது மட்டுமின்றி, "இதுபோன்ற மடங்களில் வாரிசாக சைவ வேளாளர் சமுதாயத்தில் இருந்து வருபவரைத்தான் மடாதிபதியாக அறிவிக்க வேண்டும். அந்த சமுதாயத்தில் இருந்து வராத நித்யானந்தாவை நியமித்தது தவறு" என்றும் கூறியுள்ளார் ஊரான் அடிகள். ஆனால் இளைய மடாதிபதியாக ஆன நித்யானந்தாவோ அதை மறுத்திருக்கிறார். "நானும் அந்த சமுதாயமே" என்று கூறி, "ஆதீனத்தை சிறப்புமிக்க பாதையில் எடுத்துச் செல்வேன்" என்று மறுத்துரைத்துள்ளார். மதுரை ஆதீனமும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அவர், " நான் பெங்களூரில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு போனேன். போராடும் குணத்துடன் கூடிய ஆன்மீகவாதி வேண்டும் என்பதால் நித்யானந்தாவை நான்தான் வற்புறுத்தி மதுரை ஆதீனத்தின் 293ஆவது இளைய சன்னிதானமாக அறிவித்திருக்கிறேன். அதில் தவறு ஏதுமில்லை" என்று கூறியிருக்கிறார். இந்த முடிவிற்கு எதிரான போராட்டங்களை எல்லாம் தூக்கியெறிந்து விட்டு, இப்போது நித்யானந்தா முதலில் இருந்த திருவண்ணாமலைக்கே சென்று இரண்டாவது பட்டாபிஷேக நிகழ்ச்சியை செய்து முடித்திருக்கிறார்.

நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய சன்னிதானம் என்று அறிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீதிமன்றம் மூலம் இப்போது ஒரு நிவாரணம் கிடைத்திருந்தாலும், சைவ மடங்களின் எதிர்ப்பால் மதுரை ஆதீனத்தை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை உருவானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இதற்கிடையில் மதுரை ஆதீனத்தின் மீது வருமான வரி சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. இந்த சோதனைக்கு தி.மு.க.வே காரணம் (மத்திய வருவாய்த்துறை இணை அமைச்சராக பழனிமாணிக்கம் இருப்பதால்) என்று குற்றச்சாட்டுகள் எழ, "இந்த ரெய்டிற்கும் தி.மு.க.விற்கும் சம்பந்தமில்லை. அப்படி யாராவது சொன்னால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரும், வடசென்னை தி.மு.க. எம்.பி.யுமான டி.கே.எஸ். இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார். ஆனால் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. மட்டும் இவ்விடயத்தில் இன்னும் ஒரு நிலைப்பாடு எடுக்காமல் இருக்கிறது. அக்கட்சி எடுக்கும் நிலைப்பாட்டை வைத்தே எதிர்காலத்தில் நித்யானந்தாவிற்கு தலைவலி வருமா என்பது தெரியவரும்.

You May Also Like

  Comments - 0

  • Sooriyan Thursday, 17 May 2012 04:04 AM

    நித்யானந்தாவிற்கு தலைவலி வரும் ஆனா வராது ..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X