2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மோடி அலை நீடிக்குமா?

A.P.Mathan   / 2014 மே 19 , பி.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய மக்கள் திருவிழா நடந்து முடிந்து விட்டது. வெளிவந்திருக்கின்ற தேர்தல் முடிவுகள் இந்திய அரசியலை குலுங்க வைத்துள்ளன.  தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை வகித்த பாரதீய ஜனதாக் கட்சி மட்டுமே 282 எம்.பி.க்களைப் பெற்று 30 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக தனித்து ஆட்சி அமைக்கும் பாக்கியத்தைப் பெறுகிறது. அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தான் போட்டியிட்ட வாரணாசி, வதோதரா ஆகிய இரு தொகுதிகளிலுமே வெற்றி பெற்றிருக்கிறார். உத்தரபிரதேசத்தில் உள்ள வாராணாசியிலும், குஜராத்தில் உள்ள வதோதராவிலும் மோடி வெற்றி பெற்றிருந்தாலும், குஜராத் மக்கள் அவருக்கு வாக்குகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.  அந்த தொகுதியில் பதிவான 11.61 லட்சம் வாக்குகளில் 8.45 லட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.கடந்த பத்தாண்டுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் ராஜ்ய சபை மூலம் எம்.பி.யாகி பிரதமராக இருந்தவர் டாக்டர் மன்மோகன்சிங். இப்போது ஒரு தொகுதிக்கு இரு தொகுதிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திரமோடி இந்தியப் பிரதமராகிறார்.

பா.ஜ.க.வின் முதல் இலக்கும் பிரச்சாரமுமே 272 ப்ளஸ் என்பதுதான். இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள 543 எம்.பி.க்களில் தனித்து ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்குத் தேவையான எம்.பி.க்களின் எண்ணிக்கைதான் இது. அந்த 272 எண்ணிக்கையைத் தாண்டி பா.ஜ.க. மட்டுமே 282 எம்.பி.க்களைப் பெற்று விட்டது. பா.ஜ.க. தலைமை தாங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 336 எம்.பி.க்களைப் பெற்றுள்ளது. இந்த வெற்றி சமீப காலங்களில் இந்தியா அறியாத வெற்றி. அது மட்டுமின்றி கிட்டத்தட்ட 1989ல் துவங்கிய கூட்டணி ஆட்சிக்கு முடிவு கட்டிய வெற்றி. சுமார் 25 வருடங்களாக இந்தியாவில் ஆட்சி செய்த வி.பி.சிங், சந்திரசேகர், நரசிம்மராவ், தேவகவுடா, ஐ.கே. குஜ்ரால், வாஜ்பாய், டாக்டர் மன்மோகன்சிங் ஆகிய ஏழு பிரதமர்களும் கூட்டணிக் கட்சிகளின் தயவுடனும், ஆதரவுடனும்தான் ஆட்சி நடத்தினார்கள். இவர்கள் தங்கள் ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்த போதெல்லாம் கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடியால் வந்த பிரச்சினை இது என்ற பட்டம் சூட்டி வந்தார்கள். இந்திய வாக்காளர்கள் அந்த முறைக்கு விடை கொடுத்து, நரேந்திரமோடி தலைமையில் தனித்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பை வாரி வழங்கியிருக்கிறார்கள். கூட்டணி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து பா.ஜ.க.வின் இரண்டாவது பிரதமராகிறார் நரேந்திரமோடி. ஏழு பிரதமர்களுக்குப் பிறகு இப்போதுதான் முதன் முறையாக தன் சொந்தக் கட்சி மெஜாரிட்டியில் பிரதமராகிறார் நரேந்திரமோடி என்பது இன்னும் கூட பொருத்தமாக இருக்கும்.

நரேந்திரமோடியின் வெற்றி தேசிய அரசியலை சுக்கு நூறாக உடைத்துப் போட்டிருக்கிறது. மூன்றாவது அணி ஆட்சி அமைப்போம் என்று கூறிக் கொண்டிருந்த இடது சாரிக் கட்சிகள் மூன்று சதவீத வாக்குகளை வாங்குவதற்குள் முழி பிதுங்கி நிற்கின்றன. அடுத்த பிரதமர் என்று கூறிக் கொண்டிருந்த பகுஜன் சமாஜ்வாடிக் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாடிக் கட்சி தலைவர் முலயாம் சிங் யாதவ் எல்லாம் தங்கள் மாநிலங்களில் தங்கள் கட்சியைக் காப்பாற்றுவதே பெரும் பிரச்சினை என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். இந்த இருவரில் மாயாவதியின் வாக்குகளை பெருமளவு சரிய வைத்தவர் மோடி என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. அதே போல் இங்கு 18 சதவீத வாக்குகளை வைத்திருந்த காங்கிரஸ் கட்சி இப்போது வெறும் 9.75 சதவீதத்திற்கு வந்து விட்டது. ஆனால் மோடி தலைமையிலான பா.ஜ.க. 42க்கும் அதிகமான சதவீத வாக்குகளை இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் அதுவும் 80 நடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட மாநிலத்தில் வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறது. உத்தரபிரதேசம், மஹாராஷ்டிரம், தமிழ்நாடு, ஆந்திரா, பீஹார், மேற்குவங்கம் உள்ளிட்ட 291 எம்.பி.க்கள் உள்ள பெரிய மாநிலங்களில் காங்கிரஸுக்குக் கிடைத்த எம்.பி.க்கள் 11 மட்டுமே. ஆனால் பா.ஜ.க.விற்கு 121 எம்.பி.க்கள் இந்த மாநிலங்களில் மட்டும் கிடைத்துள்ளார்கள். பா.ஜ.க.வின் இந்த அமோக வெற்றிக்கு அதிக எம்.பி.க்களைக் கொண்ட மாநிலங்கள் கை கொடுத்ததுதான் முக்கியக்காரணமாக அமைந்திருக்கிறது.

ஆனால் மோடியுடன் கூட்டணி வைக்கவில்லை என்றாலும் அவர் கையில் எடுத்த காங்கிரஸ் எதிர்ப்பு ஆயுதத்தை தூக்கிப் பிடித்து களத்தில் நின்ற மற்ற தலைவர்களும் அசாத்திய வெற்றியினைப் பெற்றிருக்கிறார்கள். மேற்வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி காங்கிரஸ் எதிர்ப்பை தன் பிரச்சாரமாக்கினார். அவர் அங்குள்ள 48 தொகுதிகளில் 34 எம்.பி.க்களைப் பிடித்துள்ளார். அதே மாதிரி ஒடிஸ்ஸாவில் முதல்வர் பிஜூ பட்நாயக் காங்கிரஸ் எதிர்ப்பில் அங்குள்ள 20 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 39 நாôடளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் எதிர்ப்பை முதன்மைப்படுத்தி முதல்வர் ஜெயலலிதா 37 தொகுதிகளை கைப்பற்றியுள்ளார். நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் எதிர்ப்பு அலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் மட்டுமல்ல பயன்பெற்றவர்கள் என்றால் அதில் முதலாவது நரேந்திரமோடி. ஆட்சி அமைக்கிறார். அடுத்தது ஜெயலலிதா. அவர் 37 இடங்களைப் பெற்று அகில இந்தியாவில் மூன்றாவது கட்சியாக இருக்கிறது அ.தி.மு.க. அடுத்தபடியாக மம்தா பானர்ஜி மேற்குவங்கத்தில் இடதுசாரிகளுக்கு தோல்வி மூட்டையைக் கொடுத்து வழியனுப்பி வைத்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். பிஜூ பட்நாயக்கோ நான்காவது முறையாக முதலமைச்சார தேர்வு செய்யப்படுகிறார். அநேகமாக ஆறு முறை முதல்வராக இருந்த ஜோதிபாசு, ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதி உள்ளிட்டோரின் ரிக்கார்டுகளை இவர் எதிர்காலத்தில் முறியடிக்கக்கூடும்.

இவ்வளவு பெரிய காங்கிரஸ் எதிர்ப்பு அலையிலும் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. பெற்றது 31 சதவீத வாக்குகள்தான். மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பிற கட்சிகளிடம் சிதறிக் கிடக்கின்றன. அந்த சிதறல்தான் நரேந்திரமோடியின் வெற்றிக்கு வழி அமைத்துக் கொடுத்திருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில் 19 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. கடந்த முறை 2009 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. இதை விட குறைவாக 18 சதவீத வாக்குகளைப் பெற்றுத்தான் தோல்வியைக் கண்டது. ஆனால் எதிர்கட்சியாக இருக்குமளவிற்கு சீட்டுக்களைப் பெற முடிந்தது. இந்த முறையோ இந்திய வரலாற்றில் முதன் முறையாக எதிர்கட்சியே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. நாடாளுமன்றத்தில் உள்ள 543 எம்.பி.க்களில் 10 சதவீத எம்.பி.க்கள் ஒரு கட்சிக்கு இருந்தால் மட்டுமே அக்கட்சிக்கு எதிர்கட்சி அந்தஸ்து கிடைக்கும். ஆனால் இப்போது காங்கிரஸுக்கு இருப்பது 44 எம்.பி.க்கள் மட்டும்தான். இந்த பத்து சதவீதக் கணக்குப்படி பார்த்தால் 54 எம்.பிக்கள் இருந்தால்தான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கோ அல்லது ராகுல் காந்திக்கோ நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் பதவி கொடுக்க முடியும். இந்த முறை அந்த வாய்ப்பு காங்கிரஸுக்கு பறி போயிருக்கிறது. பெருந்தன்மையாக மோடி விட்டுக் கொடுத்தால் மட்டுமே காங்கிரஸýக்கு எதிர்கட்சி அந்தஸ்து கிடைக்கும். மக்களைப் பொறுத்தமட்டில் காங்கிரஸ் ஆளுங்கட்சி பதவியிலிருந்து மட்டுமல்ல, எதிர்கட்சி பதவியிலிருந்தும் இறக்கி விட்டார்கள்.

இவ்வளவு மோசமான தோல்வியை காங்கிரஸ் சந்தித்ததற்கு முக்கிய காரணம் அக்கட்சிக்கு அடுத்த தலைவர் ராகுல் காந்தியை எப்படிக் கொண்டு வந்து நிலைநிறுத்துவது என்ற அதிகாரச் சிக்கலில் மாட்டிக் கொண்டதே காரணம். பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கை சுதந்திரமாக செயல்படவிடவில்லை. அப்படியே செயல்பட்டு அவர் சில சாதனைகளைச் செய்தாலும், அதை வேறு எந்த காங்கிரஸ் தலைவரும் பாராட்டிப் பேச முன்வரவில்லை. சோனியா கோபித்துக் கொள்வார். ராகுல் கோபித்துக் கொள்வார் என்று காங்கிரஸ் ஆட்சியின் பத்தாண்டு சாதனைகளை மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்லவே தயங்கினார்கள். அரசின் சாதனை குறித்து அவர்கள் மன்மோகன் சிங்கையும் பேச விடவில்லை. காங்கிரஸ் தலைவர்களும் பேசவில்லை. ஏதோ ஒரு ஊமை அரசாங்கம் இந்தியாவில் இருக்கிறதோ என்று நினைக்கும் அளவிற்கு மக்கள் காங்கிரஸ் அரசு மீது கோபம் கொண்டார்கள். கடந்த பத்தாண்டு காலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் மன்மோகன்சிங்கின் அதிகாரத்தையும் தாண்டி செய்த ஒரே காரியம், கூட்டணிக் கட்சிகளை சி.பி.ஐ. மூலம் எப்படி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வது என்பது மட்டும்தான்.

இவற்றை வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த நரேந்திரமோடி வித்தியாசமான அரசாங்கத்தைக் கொடுப்பார் என்றே இந்திய வாக்காளர்கள் நம்புகிறார்கள். அவருக்கு எதிராக 69 சதவீத வாக்குகள் இருக்கின்றன என்பதை மோடியும் உணர்ந்திருப்பார். அதனால் பா.ஜ.க.வின் அடிப்படைக் கொள்கைகளான ராமர் கோயில் கட்டுவது, காஷ்மீருக்கு 370 வது அரசியல் சட்டப்படி சிறப்பு அந்தஸ்து வழங்குவது, பொது சிவில் சட்டம் போன்றவற்றிற்குள் மூக்கை நுழைக்காமல் வளர்ச்சி, ஊழல் ஒழிப்பு, பொருளாதார மேம்பாடு, விலைவாசி குறைப்பு போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு. அவருக்கு வாக்களித்தவர்கள் கோயிலுக்காகவோ, பொது சிவில் சட்டத்திற்காகவோ வாக்களிக்கவில்லை. நாட்டில் ஒரு மாற்றம் வேண்டும். அண்டை நாடுகளும் இந்தியாவை மதிக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட வளர்ச்சிப் பாதையில் இந்தியா பீடு நடை போட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பெருவாரியாக வாக்களித்துள்ளார்கள். இந்தப் பாதையை விட்டு மோடி விலகினால்,  பிரிந்து கிடக்கும் கட்சிகள் ஒருங்கிணையும் என்பதை யாரும் மறுக்கவும் முடியாது. மறைக்கவும் முடியாது.

பா.ஜ.க.வின் அடிப்படை கொள்கையிலிருந்து விலகி நின்று அப்படியொரு நல்லரசைக் கொடுப்பதற்கு நரேந்திரமோடிக்கு வாய்ப்பு இருக்கிறது. முதல் காரணம் அவருக்கு இருக்கும் தனிப்பட்ட மெஜாரிட்டி. இன்னொரு காரணம் தனிமெஜாரிட்டிக்கும் அதிகமாக இருக்கும், பிரச்சினை பண்ணாத கூட்டணிக் கட்சிகளின்  எம்.பி.க்களின் எண்ணிக்கை. அதை விட முக்கியமாக தனி மெஜாரிட்டி இல்லாததால்  மற்ற அரசியல் சட்ட அமைப்புகள் நிர்வாக விஷயங்களில் கொஞ்சம் அடக்கி வாசிக்கும் வாய்ப்பு உருவாகும். நாடாளுமன்றத்திற்குள்ளும் இவருக்கு பெரிய அளவில் குடைச்சல் கொடுக்க எதிர்கட்சியே இல்லை. நரேந்திரமோடிக்கு பிரச்சினை என்பது ராஜ்ய சபையில் மட்டுமே வரும். ஏனென்றால் அங்குதான் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற பா.ஜ.க.விற்கு போதிய எண்ணிக்கையில் ராஜ்ய சபை உறுப்பினர்கள் இல்லை. ஆனால் காங்கிரஸுக்கும், பா.ஜ.க.விற்கும் இணக்கமான கொள்கை விஷயங்களில் அதற்கும் பிரச்சினை இருக்காது. அடுத்து ராஜஸ்தான், ஆந்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கிடைக்கும் ராஜ்ய சபை உறுப்பினர்களும் நரேந்திரமோடிக்கு கை கொடுக்கும். அந்த வகையிலும் கூட காலப்போக்கில் பிரச்சினை இல்லாமல் போகும். ஆகவே முழு சுதந்திரம் கிடைத்த பிரதமராக அந்த நாற்காலியில் அமரப்போகிறார் நரேந்திரமோடி. அதனால் அவர் மக்களுக்கு நிறையச் செய்வார் என்ற எதிர்பார்ப்பே நிலவுகிறது.

மே 21ம் தேதி நரேந்திரமோடி பா.ஜ.க.வின் பாராளுமன்றத் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதன்பிறகு அவர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார். முதல் ரவுண்டில் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி என்பதில் பா.ஜ.க.வினர் ஆர்வம் காட்டவில்லை என்றே தோன்றுகிறது. குறிப்பாக தமிழகத்தில் அவர்கள் உருவாக்கிய கூட்டணியின் சார்பில் இருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்கள். பா.ஜ.க. சார்பில் பொன். ராதாகிருஷ்ணன். அவருக்கு தமிழக அமைச்சரவைக் கோட்டா கிடைக்கும். ஆனால் பா.ம.க. சார்பில் வெற்றி பெற்ற அன்புமணி ராமதாஸுக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறி. அது மட்டுமல்ல, எந்த முன் நிபந்தனையும் இல்லாமல் பா.ஜ.க. அணியில் முதலில் சேர்ந்த வைகோ தோற்று விட்டார். ஆனால் அவருக்கு ஏதாவது ஒரு வழியில் ஆறுதல் சொல்ல வேண்டும் என்று பா.ஜ.க. தலைமை நினைக்கக் கூடும். அதே போல்தான் விஜயகாந்த். பா.ஜ.க. கூட்டணிக்காக மாநிலத்தின் அனைத்துப் பகுதிக்கும் சென்று பிரச்சாரம் செய்த ஸ்டார் பிரச்சார நாயகர். அவருக்கு என்ன செய்வது என்பதும் பா.ஜ.க.வின் யோசனைகளில் ஒன்றாக இருக்கலாம்.  இது தவிர சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும், சிவசேனா கட்சியும் சேர்ந்து 34 எம்.பி.க்களை வைத்துள்ளார்கள். இவர்களும் பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளே. அவர்களுக்கு என்ன பிரதி உபகாரம் என்பதையும் பா.ஜ.க. யோசிக்கும். ஆகவே மோடி பிரதமரானதும் முதல் விஷயமாக கூட்டணிக் கட்சிகளுக்கு என்ன செய்வது என்பது பற்றிய ஆலோசனை இருக்கும்.

எது எப்படியோ இந்திய தேர்தல் முடிந்து, தனி மெஜாரிட்டியுடன் ஒரு மத்திய அரசு 30 வருடங்களுப் பிறகு உருவாகிறது. அண்டை நாடுகளுடன் இதுவரை கூட்டணி பிரதமராக இருந்தவர்கள் கடைப்பிடித்த அணுகுமுறைக்கும், இப்போது தனி மெஜாரிட்டியுடன் இருக்கும் பிரதமர் கடைப்பிடிக்கப் போகும் அணுகுமுறைக்கும் வித்தியாசம்  இருக்கும். அதனால் சீனா, பாகிஸ்தான், இலங்கை, நேப்பால் போன்ற அண்டை நாடுகளுக்கும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கும் மாற்றும் இருக்குமா என்பது பிரதமரின் முதல் உரையில்தான் தெரிய வரும். இப்போதைக்கு அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்துச் செல்வேன் என்று கூறியிருந்தாலும், அவர் முதலில் வாரணாசிக்குச் சென்று கங்கை நதிக்குப் பூஜை செய்திருக்கிறார் என்பது இங்கே கூர்ந்து கவனிக்கத்தக்கது. வளர்ச்சி நாயகன் என்ற பெயருக்கு கிடைத்திருக்கும் வாக்குகளை அப்படியே தன் பக்கத்திலேயே வைத்துக் கொள்ளும் வகையில் எதிர்கால நிர்வாகத்தை நடத்த வேண்டிய பெரும் பொறுப்பு நரேந்திரமோடிக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கையில்தான் அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X