2026 மார்ச் 30, திங்கட்கிழமை

“இந்திய வரி முறையை பின்பற்றவும்” ; நாமல் கோரிக்கை

Janu   / 2026 மார்ச் 29 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் அண்மைக்கால எரிபொருள் வரி சீர்திருத்த முறையை போன்றதொரு மாதிரியை இலங்கையும் பின்பற்றுவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது 'X' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா தனது மதுவரித் தீர்வையினை (Excise Duty) குறைத்தமையானது விலைகளை உடனடியாகக் குறைப்பதற்காக அல்ல, மாறாக சந்தையை நிலைப்படுத்தவும், உலகளாவிய எண்ணெய் விலை அதிர்ச்சிகளின் போது மேலதிக விலை அதிகரிப்புகளை தடுக்கவுமே ஆகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை முன்னோக்கி செல்லும் வேளையில், அரசாங்கம் தனது சொந்த பொருளாதார கொள்கைகளையும் வலுப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

"நிதி கட்டுப்பாடு (Fiscal discipline) முக்கியமானது என்றாலும், இந்தியாவின் வளர்ச்சி சார்ந்த அணுகுமுறையில் காணப்படுவது போல, அதிகப்படியான வரி சுமைகளை குறைப்பது முதலீடுகளை தூண்டவும், குடிமக்கள் மீதான அழுத்தத்தை தணிக்கவும், நீண்டகால பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கவும் உதவும்" என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 38,000 தொன் எரிபொருளை உரிய நேரத்தில் இலங்கைக்கு அனுப்பி வைத்ததன் மூலம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இந்திய மக்களும் மீண்டும் ஒருமுறை 'அண்டை நாட்டுக்கு முதலிடம்' (Neighbourhood First) என்ற கொள்கையை உறுதிப்படுத்தியுள்ளதாக  ராஜபக்ஷ பாராட்டியுள்ளார்.

"நெருக்கடியான காலங்களில் அத்தியாவசிய பொருட்கள் முதல் பொருளாதார உதவிகள் வரை, இலங்கைக்கான முதல் பதிலளிப்பாளராக (First responder) இந்தியா தொடர்ச்சியாக இருந்து வருகின்றது. இது இந்தியாவின் 'அண்டை நாட்டுக்கு முதலிடம்' என்ற கொள்கையின் உண்மையான பிரதிபலிப்பாகும். ஒரு பிராந்தியமாக, பிராந்தியத்தின் மேன்மைக்காக நாடுகள் மூலோபாயப் பங்காளிகளாக இணைந்து பணியாற்றுவது அவசியமாகும்" என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .