Mayu / 2026 ஏப்ரல் 22 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் கேரளக் கடற்கரையில் விபத்துக்குள்ளான 'எம்.எஸ்.சி. எலசா III' (MSC Elasa III) கப்பலிலிருந்து வெளியேறிய அபாயகரமான நெகிழி மணிகள் (Plastic Pellets), தற்போது இலங்கையின் வடமேற்கு கடற்கரைப் பகுதிகளில் கரை ஒதுங்கி வருகின்றன.

இதனால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (MEPA) தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
புத்தளம், வனாத்தவில்லு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொங்கனத்த மற்றும் பளுக்காத்துறை கடற்கரைகளில் பெருமளவிலான நெகிழி மணிகள் கரை ஒதுங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இப்பகுதிகளைத் தூய்மைப்படுத்தும் பணிகளை முறையாகத் திட்டமிடுவதற்காகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) விசேட கள ஆய்வுப் பயணம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின்போது, தூய்மைப் பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை எப்படிக் குறைப்பது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதில் வனாத்தவில்லு பிரதேச செயலாளர் ஆர். பிரபாகரன், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சமந்த குணசேகர, பொது மேலாளர் ஜகத் குணசேகர, பூக்குளம் கிராம அலுவலர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.
விபத்துக்குள்ளான கப்பலிலிருந்து வெளியேறிய இந்தச் சிறிய நெகிழி மணிகள், கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. இவை மீன்கள் மற்றும் ஆமைகளால் உணவெனத் தவறாகக் கருதப்பட்டு உட்கொள்ளப்படுவதால், கடல்சார் உணவுச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கள ஆய்வின் முடிவில், பிரதேச செயலகத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் தன்னார்வலர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினரை ஒருங்கிணைத்து, கடற்கரைகளைச் சுத்தம் செய்யும் பணிகளை உடனடியாகத் தொடங்கத் தீர்மானிக்கப்பட்டது. மணலில் கலந்துள்ள இந்த நுண் நெகிழிகளை அகற்றுவது சவாலான காரியம் என்பதால், இதற்கென விசேட தொழில்நுட்ப முறைகளைக் கையாளவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கடல் வளத்தையும், கடற்கரை அழகையும் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்தத் தூய்மைப் பணியில் பொதுமக்களின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
எம் எச் எம் சியாஜ்
19 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
35 minute ago