2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

கணவர் ஏ.சி. வாங்கித் தராததால் மனைவி விபரீத முடிவு

Editorial   / 2026 ஏப்ரல் 26 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், குளிர்சாதன இயந்திரம் (ஏ.சி.) வாங்கித் தரவில்லை என்ற காரணத்திற்காக இளம் குடும்பப் பெண் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் திருவள்ளூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூரை அடுத்த பூண்டி, ஜெயராம் தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ் (26). இவரும், புல்லரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மோனிகா (25) என்பவரும் பள்ளிப் பருவத்திலிருந்தே காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் திருமணத்தில் முடிந்து, தற்போது இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஆகாஷ் திருவள்ளூரில் உள்ள தனியார் துணிக்கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். மோனிகா இல்லத்தரசியாக வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
 

தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதால், இரவு நேரத்தில் வீட்டில் புழுக்கம் அதிகமாக இருப்பதாகக் கூறி, ஏ.சி. ஒன்று வாங்கித் தருமாறு மோனிகா தனது கணவரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாகக் கணவன் - மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று (24) இரவு வெம்மை தாளாமல் ஆகாஷ், அவரது தம்பி அவினாஷ் மற்றும் பெற்றோர்கள் ஆகிய நால்வரும் வீட்டின் மொட்டை மாடியில் உறங்கச் சென்றுள்ளனர். மோனிகா மட்டும் வீட்டின் உள்ளே தனியாக உறங்கியுள்ளார்.

இன்று காலை ஆகாஷ் கீழே வந்து பார்த்தபோது, படுக்கையறையில் மோனிகா தன்னுயிரை மாய்த்துக்கொண்ட நிலையில்  இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்துத் தகவல் அறிந்த புல்லரம்பாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மோனிகாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காதலித்துத் திருமணமான இரண்டு ஆண்டுகளிலேயே இளம் பெண் இத்தகைய விபரீத முடிவை எடுத்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .