2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஜெயலலிதா மரணம்: ‘தமிழக அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்’

Princiya Dixci   / 2017 ஜனவரி 10 , மு.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்கு, தமிழக அரசாங்கம் பதிலளிக்க வேண்டுமென, மெட்ராஸ் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 4 வாரங்களுக்குள், இந்தப் பதில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனவும், அந்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அ.இ.அ.தி.மு.கவைச் சேர்ந்த தொண்டர் ஒருவர், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் தனக்குச் சந்தேகம் காணப்படுவதாகத் தொடர்ந்த வழக்கிலேயே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது, அரசாங்கத் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி, ஜெயலலிதாவின் மரணத்தில் எந்தச் சந்தேகமும் கிடையாது எனவும் சரியான சிகிச்சை அளிக்கப்பட்டது எனவும் தெரிவித்ததோடு, இது தொடர்பாக ஏற்கெனவே தொடரப்பட்ட இரண்டு வழக்குகள், தள்ளுபடி செய்யப்பட்டதையும் சுட்டிக் காட்டினார். 

மத்திய அரசாங்கம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, “தேவைப்படுமாயின், இந்த மனு தொடர்பாக மத்திய அரசாங்கத்திடம் விளக்கம் பெற்றுப் பதிலளிக்க, கால அவகாசம் தேவை” என்றார். 

விவாதங்களைச் செவிமடுத்த பின்னர் கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்களைப் போக்க, மாநில அரசாங்கம் முற்றிலுமாகத் தவறி விட்டது. ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த தகவல்களை தெரிவிக்காததில் இருந்தே பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளனவோ என்ற ஐயம் எழுந்துள்ளது” என்று தெரிவித்தனர். 

எனவே, நான்கு வாரங்களுக்குள், இது தொடர்பில் தமிழக அரசாங்கம் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை, பெப்ரவரி 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர். 

இதேவேளை, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக, மூடப்பட்ட கடித உறைக்குள், பதிலொன்றை வழங்குவதற்குத் தயராக இருப்பதாக, ஜெயலலிதா சிகிச்சைபெற்று வந்த தனியார் வைத்தியசாலை அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .