2026 மார்ச் 10, செவ்வாய்க்கிழமை

பிரதமர் கலாநிதி ஹரிணி க்கு சர்வதேச தலைமைத்துவ விருது

Editorial   / 2026 மார்ச் 10 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெண்களின் ‘ஊதியமற்ற’ வீட்டு உழைப்பானது குடும்பத்திற்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்குகின்றது எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் அமைந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைமையகத்தில் இன்று (மார்ச் 10) நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் முதன்மை உரை நிகழ்த்திய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பெண் தலைமைத்துவம் மற்றும் பெண் வலுவூட்டலுக்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆற்றிவரும் விசேட அர்ப்பணிப்பைப் பாராட்டி, அவருக்கு "ஷிரீன் லத்தீப் பெண் தலைமைத்துவ விருது" (Shireen Lateef Women’s Leadership Award) இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

பெண்கள் குடும்பத்திற்காக ஆற்றுகின்ற, பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாத ‘ஊதியமற்ற’ வீட்டுப் பணிகள், தேசிய பொருளாதாரத்திற்குப் பாரிய பங்களிப்பை வழங்குகின்றன. இதனைச் சரியாக இனங்கண்டு அங்கீகரிப்பது அவசியமாகும்.

பெண்களைப் பொருளாதார நடவடிக்கைகளில் முழுமையாகப் பங்கெடுக்கச் செய்யக்கூடிய பெண் நேயக் கொள்கைகள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளை வலுவூட்டுவதற்குத் தரமான கல்வியை வழங்குவது அவசியமானது. இலங்கை எப்போதும் கல்விக்கு முன்னுரிமை அளித்து வருவதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

தீர்மானம் எடுக்கும் மட்டத்திலான அரசியல் செயல்முறைகளில் பெண்கள் உள்வாங்கப்படுதல் மற்றும் வேலைவாய்ப்புச் சந்தையில் சமவாய்ப்புகளைப் பேணுதல் ஆகியன நிலையான அபிவிருத்திக்கு அவசியமானவை.

இந்த விழாவில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் உள்ளிட்ட சிரேஷ்ட நிர்வாகத்தினர், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .