2026 மார்ச் 18, புதன்கிழமை

புதிய இணைய நிதி மோசடி ; பொது மக்களுக்கு எச்சரிக்கை

Janu   / 2026 மார்ச் 18 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இணையத்தளம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிச் செயல்கள் மற்றும் நிதிக் குற்றங்கள் குறித்து இலங்கை பொலிஸார் தொடர்ந்து பொதுமக்களை விழிப்புணர்வு செய்தாலும், இத்தகைய மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக நாட்டின் முன்னணி மற்றும் நம்பகமான நிறுவனங்களின் பெயர்களைத் தவறாகப் பயன்படுத்தி மோசடிக்காரர்கள் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் பயன்படுத்தும் முறைகளையும் இலங்கை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

மோசடியில் ஈடுபடும் நபர்கள் பொதுமக்களை ஏமாற்றுவதற்காகப் பயன்படுத்தும் உத்திகள்:

பிரபலமான ஒரு நிறுவனத்தின் பிரதிநிதிகளாக நடித்து, அந்த நிறுவனத்தின் சேவைகளைப் பெற விசேட தொலைபேசி செயலி ஒன்றை (App) நிறுவ வேண்டும் என்று உங்களைத் தூண்டுவர். அதை நிறுவ உதவுவதாகக் கூறி, உங்கள் தொலைபேசித் திரையை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள (Screen Share) சொல்லுவர்.

இதன் மூலம், உங்கள் தொலைபேசித் திரையைப் பகிர்ந்தவுடன், மோசடிக்காரர்களுக்கு உங்கள் சாதனத்தைத் தொலைவிலிருந்து அணுகும் (Remote Access) திறன் கிடைக்கும். அதன் மூலம், உங்கள் தொலைபேசியிலுள்ள நிகழ்நிலை வங்கிச் செயலிகள் (Online Banking Apps) மூலம் உங்கள் வங்கிக் கணக்கிலுள்ள பணத்தை மிக நுணுக்கமாக வேறு கணக்குகளுக்கு மாற்றிவிடுவர்.

பொதுமக்களிடம் உள்ள தொழில்நுட்ப அறிவுப் பற்றாக்குறை இவ்வாறான மோசடிகளுக்கு உள்ளாக முக்கிய காரணமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இவ்வாறான மோசடிகளிலிருந்து பாதுகாப்பாக இருக்கப் பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்:

  • சமூக ஊடகங்கள் ஊடாக ‘பல்வேறு வருமான வாய்ப்புகள்’ அல்லது ‘அதிக இலாபம் தரும் முதலீடுகள்’ என்று வரும் விளம்பரங்களை மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும். ஆரம்பத்தில் சிறிய இலாபம் காட்டி நம்பிக்கை ஏற்படுத்தி, பின்னர் பெரிய தொகையை மோசடி செய்வது இவர்களின் வழக்கம்.
  • வங்கிக் கணக்கு இலக்கங்கள், கடவுச்சொற்கள் (Passwords), அல்லது உங்கள் கையடக்கத் தொலைபேசிக்கு வரும் OTP குறியீடுகள் ஆகியவற்றை எந்தச் சூழ்நிலையிலும் பிறருடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது. எந்தவொரு வங்கியும், அதிகாரப்பூர்வ நிறுவனமும் தொலைபேசிகள் ஊடாக இத்தகைய தகவல்களைக் கேட்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
  • அறிமுகமற்ற நபர்களால் அனுப்பப்படும் இணைப்புகளை (Links) அழுத்துதல் அல்லது அவர்கள் வழங்கும் செயலிகளை (Apps) நிறுவுதல் தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பாக, உங்கள் தரவுகளுக்கான அணுகல் அனுமதி (Access Permissions) கேட்கப்படும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

எனவே, அறிமுகமற்ற நபர்களின் அறிவுரையின் பேரில் உங்கள் தொலைபேசித் திரையைப் பகிர்வதை (Screen Share) முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏதேனும் காரணத்தால் இத்தகைய நிதி மோசடியில் சிக்கியிருந்தால், உடனடியாகத் தொடர்புடைய வங்கி அல்லது நிதி நிறுவனத்தை அறிவித்து உங்கள் கணக்குகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X