2026 மே 07, வியாழக்கிழமை

பிரதேச சபை உறுப்பினரை அவமதித்த உத்தியோகத்தர்

Janu   / 2026 மே 07 , பி.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் வருமானப் பரிசோதகர், சபை உறுப்பினர் ஒருவரை அவதூறான முறையில் சபையிலிருந்து வெளியேறுமாறு பணித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட உறுப்பினர் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளதோடு, சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர் மற்றும் அவருக்கு துணையாக செயற்பட்ட செயலாளர் ஆகியோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில், அங்கு வந்த வருமானப் பரிசோதகர், சபை உறுப்பினர் ஒருவரை அடாவடித்தனமான முறையில் வெளியேறுமாறு கூறியுள்ளார். இதன்போது, "உங்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார்?" என உறுப்பினர் வினவியபோது, சபையின் செயலாளரே தமக்கு அனுமதி வழங்கியதாக அந்த உத்தியோகத்தர் பதிலளித்துள்ளார்.

மேலும், "செயலாளர் எதனைக் கூறினாலும் அதனை நிறைவேற்றுவதே எனது கடமை" என அந்த உத்தியோகத்தர் சபையில் வாதிட்டுள்ளார். தவிசாளர் மற்றும் செயலாளர் முன்னிலையிலேயே இந்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்ற போதிலும், அவர்கள் மௌனம் காத்தமை உறுப்பினர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சட்ட விதிமுறைகள் மீறல்: இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பாதிக்கப்பட்ட உறுப்பினர்:

"பிரதேச சபை சட்ட விதிமுறைகளின்படி, ஒரு உத்தியோகத்தர் கௌரவ உறுப்பினர்களுடன் எவ்வாறு உரையாட வேண்டும் என்ற ஒழுக்கநெறி உள்ளது. சபை மண்டபத்திற்குள் நுழைவதற்கு அவருக்கு அனுமதி இருக்கின்றதா? அப்படி அனுமதி இருந்தாலும், உறுப்பினர்களை வெளியேறுமாறு பணிக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதா? சட்டங்களை நிலைநாட்ட வேண்டிய செயலாளரே இத்தகைய செயல்களுக்குத் துணையாக இருப்பது கண்டிக்கத்தக்கது." என்றார்.

முறைப்பாடுகள்: குறித்த அநீதிக்கு எதிராக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சுதர்சன் அவர்களிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இதன் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின்படி, இந்த விவகாரத்தில் முறையான ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. "நான் தவறு செய்திருந்தால் எனக்கெதிராகவும் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், சட்டத்திற்குப் புறம்பாகச் செயற்பட்ட உத்தியோகத்தர் மற்றும் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்ட செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" எனப் பாதிக்கப்பட்ட உறுப்பினர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

பூ.லின்ரன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .