2026 ஜனவரி 17, சனிக்கிழமை

வழக்குகளில் தொடர்புடையவர் புழல் சிறையில்

Freelancer   / 2023 நவம்பர் 13 , மு.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் அகதிகள் போர்வையில்  தமிழகத்தில் பதுங்கி இருப்பதற்காக படகு மூலம் தனுஷ்கோடி  வந்திறங்கிய நிலையில் கைது செய்த மரைன் பொலிஸார்  அவரை சென்னை புழல் சிறையில் தடுத்து வைத்துள்ளனர்.

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் அந்நிய நபர்கள் நடமாட்டம் மற்றும் கடத்தல் தடுப்பு தொடர்பாக ரோந்து பணியில் ராமேஸ்வரம் மரைன் பொலிஸார்,  சனிக்கிழமை (11) காலை  ஈடுபட்டு வந்தனர்.

அப்போது  தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் மரைன் பொலிஸாரை கண்டதும் தப்பியோட முயன்ற இலங்கை நபர் ஒருவரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்துள்ளார்.

இதனால்  சந்தேகமடைந்த மரைன் பொலிஸார், மண்டபம்  காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தபோது அவர் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் ஊர்காவற்றுறை சேர்ந்த  ஜெயராசா என தெரிய வந்தது.

 இதையடுத்து அவரிடம் மத்திய மாநில உளவுத்துறை  அதிகாரிகள் மற்றும் மரைன் பொலிஸார் ஜெயராசாவிடம் விசாரணை நடத்திய போது அவர் மீது இலங்கை சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை  பொலிஸ் நிலையங்களில் திருட்டு மற்றும் பல குற்ற பின்னணி வழக்குகள் இருக்கின்றன. 

 இவரை இலங்கை பொலிஸார் கைது செய்து சிறை தண்டனை பெற்று சிறையில் அடைத்து விடுவார்கள் என்பதால் இலங்கையிலிருந்து தப்பித்து  இரண்டு லட்ச ரூபாய் பணம் கொடுத்து படகு ஒன்றில் வௌ்ளிக்கிழமை  (10) மாலை சுமார் 4 மணியளவில் இலங்கை மன்னார் -பேசாலை  கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக தனுஷ்கோடி வந்துள்ளதாக விசாரணையில் ஜெயராசா தெரிவித்துள்ளார்.

 இதையடுத்து  இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் கடல் வழியாக இந்திய கடல் எல்லைக்குள் வந்தது தெரிய வந்ததால் அவர் மீது மண்டபம் மரைன் காவல் நிலைய பொலிஸார் கடவுச்சீட்டு இன்றி  இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக, வழக்கு பதிவு செய்து ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் அவரை சென்னை  புழல் சிறையில் அடைப்பதற்கு பொலிஸார் அழைத்து சென்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி இலங்கையின் குற்றப் பின்னணி உள்ள நபர் ஒருவர் சட்டவிரோதமாக  தமிழகத்திற்குள் ஊடுருவி அகதிகள்  போர்வையில் தமிழக அகதிகள் முகாமில் பதுங்கி  இருப்பதற்காக தனுஷ்கோடி வந்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மத்தியில்   பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X