Freelancer / 2026 மார்ச் 19 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய எல்லைப் பகுதிகளில் இன மோதல்களை தூண்டும் வகையில் மியான்மர் கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி அளித்த வெளிநாட்டவர்கள் 7 பேரை தேசிய புலவனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை மார்ச் 27 ஆம் திகதி வரை என்.ஐ.ஏ. காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவிக்கையில்,
பிடிபட்டவர்களில் 6 பேர் உக்ரைனை சேர்ந்தவர்கள், ஒருவர் அமெரிக்கர். இவர்கள் மியான்மரில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி அளித்து எல்லையில் இன மோதல்களை தூண்ட திட்டமிட்டிருந்தனர். டில்லி, லக்னோ மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து இந்த 7 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் முறையான விசா மூலம் இந்தியா வந்தடைந்தாலும், பாதுகாக்கப்பட்ட பகுதியான மிசோரமுக்கு செல்லத் தேவையான முறையான அனுமதியைப் பெறாமல் அங்கு சென்றுள்ளனர். அங்கிருந்து எல்லை தாண்டி மியான்மருக்குள் நுழைந்து, அங்குள்ள இனவாத ஆயுதக் குழுக்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இவர்கள் ஐரோப்பாவில் இருந்து பெருமளவிலான அதிநவீன ட்ரோன்களை இந்தியா வழியாக கடத்திச் சென்றுள்ளனர். இந்தியாவிலுள்ள பிரிவினைவாதக் குழுக்களுடன் தொடர்புடைய மியான்மர் கிளர்ச்சியாளர்களுக்கு இவர்கள் போர்ப் பயிற்சி அளித்தமை விசாரணையில் அம்பலமானது.
கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் 18 ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்குப் பின்னால் இருக்கும் வெளிநாட்டுச் சக்திகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர். (a)

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .