2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘செயற்பாட்டுக்குழுவின் அறிக்கை பிரிவினைக்கான விதையாகும்’

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி

“புதிய அரசியலமைப்புத் தொடர்பான செயற்பாட்டுக்குழுவின் அறிக்கையானது, வெறுமனே ஓர் அறிக்கை மட்டுமே என அரசாங்கம் தெரிவித்த போதும்,

இந்த அறிக்கை தான் பிரிவினைவாதத்துக்கான விதையாக அமையப்போகின்றது என்பது தெட்டத்தெளிவாக விளங்கியுள்ளது” என, தேசிய சுதந்திர முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.  

“தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதென்ற பேரில் இந்த அரசாங்கம் பிரிவினைவாதிகளுக்கு சாதகமாகச் செயற்பட்டு வருகிறது” என்றும் அம்முன்னணி குறிப்பிட்டுள்ளது.  

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகச் செயலாளர் மொஹமட் முஸம்மில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,  

“13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு மேலான அதிகாரங்களை வழங்கி இலங்கையை ஒரு சமஷ்டி அரசாங்கமாக மாற்றுவதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆர்வம் காட்டிவருகின்றார். 

புதிய அரசியலமைப்புத் தொடர்பான அரசியலமைப்பு சபையில் அறிக்கையொன்று தற்போது வெளிவந்துள்ள நிலையில், இந்த புதிய அரசியலமைப்பினால் ஏற்பட போகும் விளைவு தொடர்பிலும் இந்த புதிய அரசியலமைப்பினால் இந்த அரசாங்கம் எதனை நோக்கி பயணிக்கின்றது என்பது தெளிவாகியுள்ளது. 

இந்த புதிய அரசியலமைப்பு ஊடாக பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதற்கு அச்சாணியாக மாகாணங்களுக்கு அதிகளவிலான அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்கு முயல்கின்றது. திம்பு பேச்சுவார்த்தை மற்றும் வட்டுக்கோட்டை மாநாட்டில் காணப்பட்ட சுயநிர்ணயக் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த புதிய அரசியலமைப்பானது அமையவுள்ளதோடு,
13ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு மேலான அதிகாரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் இந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனவும் குறிப்பட்டார். 

“இலங்கையை ஒரு சமஷ்டி அரசாங்கமாக மாற்றுவதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆர்வம் காட்டிவருகிறார். அத்தோடு, தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதென்ற பேரில் இந்த அரசாங்கம் பிரிவினைவாதிகளுக்குச் சாதகமாகச் செயற்பட்டு வருகிறது” எனவும் அவர் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .