2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

“இரத்தினக்கல், ஆபரணச் சந்தையை வெற்றிகொள்வோம்”

Editorial   / 2025 ஓகஸ்ட் 15 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பில் சர்வதேசப் புகழ் பெற்றிருந்த போதிலும், எதிர்பார்த்த அளவிற்கு அதன் ஏற்றுமதி வளர்ச்சி அடையவில்லை என்றும், எனவே சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சந்தையை வெற்றி கொள்ளும் வகையில் நிலையான கொள்கைகளை வகுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்குடன், "Gem City Ratnapura- 2025" எனும் தலைப்பில் 2025 ஓகஸ்ட் 15, 16, மற்றும் 17 ஆகிய மூன்று நாட்கள் பெல்மடுல்ல கிராண்ட் சில்வரே விடுதியில் நடைபெறும் சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி 2025-இன் தொடக்க விழாவில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி, இலங்கையை உலகின் முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சந்தையாக நிலைநிறுத்தும் நோக்குடன், பல்வேறு வகையான இரத்தினக்கற்கள், ஆபரணங்கள், அகழ்வு மற்றும் பதப்படுத்தும் முறைகள், ஆய்வக சேவைகள், களப்பயிற்சி மற்றும் கல்வி வாய்ப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

பிரதமர் மேலும் கூறியதாவது:

"இலங்கை இரத்தினக்கற்கள் உலகெங்கிலும் பிரசித்தி பெற்றிருக்கின்றன. அத்துடன், இந்த இரத்தினக்கற்களில் பெரும் பகுதி இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்தே கிடைக்கின்றன. எனினும், இரத்தினபுரிக்கு அந்த கௌரவம் கிடைத்துள்ளதா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உயர்தர இரத்தினக்கற்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினக்கல் துறை தேசிய பொருளாதாரத்திற்கு அளிக்கும் பங்களிப்பு மிகப் பெரியது.

இருப்பினும், இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையிலிருந்து உள்ளூர் ஏற்றுமதி வருமானத்திற்கு நாம் அளிக்கக்கூடிய உச்சபட்ச பங்களிப்பினை இன்னும் அடையவில்லை. பொருத்தமற்ற கொள்கைகளே இத்துறையின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்து வருகின்றன. ஆகையால், இரத்தினக்கல் துறையின் இலக்கு ஏற்றுமதி வருமானத்தை ஈட்டத் தேவையான நிலையான கொள்கைகளை உருவாக்க எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படும்

இக்கண்காட்சியில் கலந்துகொண்டிருக்கும் அமெரிக்கா, இந்தியா, சீனா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, அரசாங்கத்தின் கொள்கைகளில் நம்பிக்கை வைத்து எதிர்காலத்திலும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் ஏற்றுமதி நடவடிக்கைகளில் இணைந்து கொள்ளுமாறு அந்நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி,

இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் ஏற்றுமதி மூலம் எதிர்பார்க்கப்படும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் என்ற கடினமான இலக்கை அடைவதற்கு, வைரக்கல் துறையின் வளர்ச்சி மற்றும் பட்டை தீட்டப்படாத இரத்தினக்கற்களை ஏற்றுமதி செய்வதற்கான புதிய சட்டங்களை உருவாக்குவது உள்ளிட்ட பல புதிய கொள்கைகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் முதலாவது அரச வர்த்தக இணையதளமாகிய http://www.gemcityratnapura.comஎன்ற இணையதளம், GOV PAY என்ற புதிய வசதியுடன் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், ஸ்ரீபாதஸ்தானதிபதி பென்கமுவே தம்மதின்ன மஹா நாயக்க தேரர், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் அதிகாரிகளும், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர உட்படப் பல அரச அதிகாரிகளும், இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் வர்த்தகர்கள் உட்படப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .