2026 மார்ச் 19, வியாழக்கிழமை

‘தமிழில் விமர்சிப்பவர்கள் சிங்களத்தில் புகழ்கின்றனர்’

Editorial   / 2017 ஒக்டோபர் 26 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார், எப்.முபாரக்,  ஏ.எம்.ஏ.பரீத், தீஷான் அஹமட்  

“தமிழ் ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சிக்கும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், சிங்கள ஊடகங்களில் அரசாங்கத்தைப் புகழ்கின்றனர்” என, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

கிண்ணியாவிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது,

“நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களாகிய நாம், உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி, புதியதோர் அரசியல் கலாசாரத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

“அதில் ஒரு முக்கிய அத்தியாயமே, அரசமைப்பு மாற்றமாகும். இந்த அரசமைப்பு மாற்றத்தை ஜனநாயக வழியில் ஏற்படுத்த, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம்.

“இதற்காகவே, ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம், எமக்குக் கிடைக்க வேண்டிய அமைச்சுப் பதவிகள், வரப்பிரசாதங்களை விட்டுக்கொடுத்து, நல்லாட்சியை ஏற்படுத்தியுள்ளோம்.

“இவ்வாறான நிலையிலேயே, வடக்கு, கிழக்கை மையமாகக் கொண்ட அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள், தம்மை சமுதாயத்தின் காவலர்களாக மக்களிடம் காண்பிக்க, ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.

“குறிப்பாக அரசமைப்பு மாற்றத்தின் மூலம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முஸ்லிம்களுக்குத் துரோகம் செய்யவுள்ளாரென பிரசாரத்தை முன்னெடுக்கின்றனர்.

“முஸ்லிம் கட்சிகள், தமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தவறவிட்டுவிட்டு, இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் பழிபோடுகின்றனர்.

“ஆகவே, இவர்களிடம் நான் ஒன்றை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். உங்களுக்குத் தைரியம் இருந்தால், நீங்கள் தமிழ் ஊடகங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பிரதமருக்கும் எதிராக வெளியிடும் கருத்துகளை, துணிவிருந்தால், சிங்கள ஊடகங்களில் தெரிவித்துப் பாருங்கள்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X