Editorial / 2018 மே 03 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எல்.நௌபர்
திருகோணமலை மாவட்ட, மூதூர் கல்வி வலயத்துக்குட்பட்ட பெரியபாலம் மூதூர் அல்மினா மகா வித்தியாலயமானது, ஆரம்பிக்கப்பட்டு 58 வருடங்களை கடந்தும், இன்னும் இப்பாடசாலையில் நிலவும் பௌதீக வளப்பற்றாக்குறைகள் நிவர்த்தி செய்யப்படவில்லையென, மாணவர்களூம் பெற்றோர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், 1960ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கலவன் பாடசாலையில், தரம் 01 முதல் தரம் 13 வரையிலான வகுப்புகளைக் கொண்ட, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருவதாக சுட்டிக்காட்டிய அம்மக்கள், 1960ஆம் ஆண்டுகாலத்தில், சுண்ணாம்பினால் அமைக்கப்பட்ட கட்டிடமே தற்போதும் பாவிக்கப்படுகிறது என்றும், இக்கட்டிங்களின் கூரைகள் சீட்டினால் வேயப்பட்டுள்ளதோடு வெய்யில் காலத்தில் உள்ளிருந்து கற்க முடியாமல் மாணவர்கள் கடும் புழுக்கத்துக்குள்ளாகின்றனர் எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, வகுப்பறை கட்டிட வசதி இன்மையால், மாணவர்கள் மர நிழல்களிலும், ஓலை கொட்டிலுக்குள்ளும், வெளியிலும் இருந்து கல்வி பயில வேண்டிய அவல நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள இவர்கள், இப்பாடசாலையில், தொழுகைக்கென கட்டப்பட்டிருக்கும் பள்ளிவாசலுக்குள் கூட, வகுப்புகளை வைத்து நடாத்தவேண்டிய அவல நிலை தோன்றியுள்ளதாகவும் இதனால் பள்ளிவாசல்களும் வகுப்பறைகளாக பாவிக்கும் பேரவலம் தோன்றியுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்கள்.
இந்நிலையில், இப் பாடசாலைக்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்ட, பல பாடசாலைகளில், மாடிக்கட்டிடங்களும் இன்னும் அனேக வளங்களும் உள்ளபோதும், இப்பாடசாலை புறக்கணிக்கப்பட்டிருப்பதாக புகார் தெரிவித்த அவர்கள், இப்பாடசாலையின் இட நெருக்கடி காரணமாக, குறைந்த சதுர அடி கொண்ட பரப்புடைய வகுப்பறையொன்றுக்குள், 35 மாணவர்கள் மிகுந்த அசௌகரியத்துக்கு மத்தியில் இருந்து கல்வி பயில வேண்டிய அவல நிலை காணப்படுவதாகவும், இதனால் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படுவதாதகவும் குறிப்பிட்டார்கள்.
இதேவேளை, இப்பாடசாலைக்குரிய விளையாட்டு மைதானம் பாடசாலையின் பராமரிப்பில் உள்ளபோதும், அது முறையாக கையளிக்கப்படாது அபிவிருத்தியின்றி காணப்படுகிறது என்றும், இதனால் மாணவர்களின் விளையாட்டு திறமையும் பாதிக்கப்படுவதாக மேலும் தெரிவித்தனர்.
இப் பாடசாலையில் கல்வி பயின்ற பல மாணவர்கள், சிறந்த பரீட்சைப் பெறுபேறுகளைப் பெற்றுள்ளதோடு, பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப் பாடசாலையில் நிலவும் பௌதீக வளப்பற்றாக் குறைகளை, நிவர்த்தி செய்து தருமாறு பெற்றோர்களும், மாணவர்களும் உரிய அதிகாரிகளிடமும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

11 minute ago
14 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago
39 minute ago