அப்துல்சலாம் யாசீம் / 2017 செப்டெம்பர் 06 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டம், மூதூரில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் அரச ஒசுசல கிளையொன்றை அமைத்துத் தருமாறு, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தப் பிரதேசத்தில், பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு இரண்டு தள வைத்தியசாலைகள், மத்திய மருந்தகங்கள், பிரேதச வைத்தியசாலைகள் மாவட்ட வைத்தியசாலைகள் உள்ளிட்ட வைத்தியசாலைகள் காணப்படுகின்றன.
எனினும், இப்பிரதேசத்திலுள்ள நோயாளர்கள், தங்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை தனியார் மருத்துவ நிலையங்களிலேயே பெற்றுக்கொள்கின்றனர்.
சில சமயங்களில், வைத்தியர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளைத் தனியார் மருந்தகங்களில் பெற்றுக்கொள்ள முடியாதிருப்பதுடன், உத்தரவாத விலைகளில் தரமான மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதிலும் பொதுமக்களும் நோயாளர்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.
அத்துடன், சில மருந்தகங்களில் போதிய அனுபவமில்லாத மருந்தாளர்களும் மருந்துகளை விற்பனை செய்து வருகின்றனரெனவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மூதூர் பிராந்தியத்தில் அரச ஒசுசல மருந்துப் பொருட்கள் விற்பனை நிலையமொன்றை திறந்துவைப்பதன் பயனாக மூதூர், கிண்ணியா, சேருவில. வெருகல் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் நன்மைபெறவுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக, சுகாதார அமைச்சர் கரிசனைக் காட்டி, அரச ஒசுசல கிளையை மூதூரில் திறப்பதற்கும் ஏற்பாடுகள் செய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .