2025 ஜூன் 28, சனிக்கிழமை

மஹிந்த ராஐபக்ஷவின் தயவில் தமிழர்கள் வாழப்போகின்றார்களா என்பதை தேர்தலே தீர்மானிக்கும்: சம்பந்தன்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 29 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                          (ரமன்)
'மஹிந்த ராஐபக்ஷவின் தயவில் தமிழர்கள் வாழப்போகின்றார்களா? அல்லது சர்வதேசத்தின் பங்களிப்புடனும், அவர்களின் மேற்பார்வையுடனும் நீண்டகாலம் நிலைக்க கூடிய நிரந்தர தீர்வை பெறப்போகின்றார்களா? என்பதே இன்று தமிழர்களுக்கும், தமிழ்பேசும் முஸ்லிம்களுக்கும் முன்னுள்ள மிகப்பெரிய கேள்வியாகும். இதற்கான பதிலை இந்த தேர்தலே தீர்மானிக்கப்போகின்றது' என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'இனப்பிரச்சனை குறித்து இலங்கை அரசாங்கம் அகங்காரமாக பேசுகின்றது. ஆனால் உள்ளே திணறிக்கொண்டு இருக்கின்றது. எமது வெளிவிகார அமைச்சர் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை இலங்கையில் வெளியிடுவதற்கு முன்னர் அமெரிக்கா சென்று, அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது பற்றிய செயல்முறைத்திட்ட அறிக்கையை சமர்பித்துவிட்டு வந்துள்ளார்.

எமக்கொரு அரசியல் தீர்வு வேண்டும். சர்வதேச சமூகமான உங்களின் பங்களிப்புடன் அந்தத்தீர்வு எமக்கு கிடைக்க வேண்டும் என்பதை இந்தத்தேர்தலில் நாம் முனைப்புடன் சர்வதேசத்திற்கு சொல்ல வேண்டியுள்ளது.

சுதந்திரத்திற்கு முன்னர் ஒரு தடவை கண்டிய லீக் என்ற சிங்கள அமைப்பு நாட்டின் நிர்வாகத்தை மூன்றாக பிரிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. கண்டிய சிங்களவர்களுக்கு கண்டியை மையமாக கொண்டு ஒரு தனியலகும், கீழ் நாட்டு சிங்களவர்களுக்கு கரையோரத்தை அடிப்படையாக கொண்ட ஒரு அலகும், தமிழர்களை உள்ளடக்கியதாக மூன்றாவது அலகும் என இவ் நிர்வாக அமைப்பு அமையவேண்டு என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் தமிழர்களாகிய நாம் அதனை அன்று எதிர்த்தோம். இவ்வாறு பல சந்தர்பங்களை நாம் இழந்துள்ளோம். எனவே இந்த இறுதி சந்தர்பத்தை நாம் கைநழுவ விடக்கூடாது.

எமது பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும்பொழுது எமது பிரதேசங்களில் அண்மைக்காலமாக அரசினால் திணிக்கப்பட்டுள்ள அடாவடித்தனமான சகல விடயங்களும் மாற்றப்பட வேண்டுமென்பதில் நாம உறுதியாக இருப்போம். அதனை நாம் நிச்சயம் வலியுறுத்துவோம். அது நிச்சயம் நமக்கு கைகூடும்' என்று அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .