2025 ஜூன் 25, புதன்கிழமை

அபாயா பற்றிய முஸம்மிலின் கூற்றுக்கு கண்டனம்

Thipaan   / 2014 செப்டெம்பர் 09 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
 
மாற்று மத சகோதாரர்கள் மத்தியில் முஸ்லிம் பெண்களின் அபாயா ஆடை பற்றி தவறான பார்வையை ஏற்படுத்தும் விதமாக கருத்து வெளியிட்ட, தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முஸம்மிலின் கூற்று மிகவும் கண்டிக்கத்தக்கது என கிண்ணியா அனைத்து பள்ளிவாசல்கள் ஒன்றியம் இன்று (09) தெரிவித்துள்ளது.
 
அபாயா ஆடை தொடர்பாக, முஸம்மிலின் கருத்தை ஆட்சேபிக்கும் வகையில், கிண்ணியா அனைத்து பள்ளிவாசல்கள் ஒன்றியம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஒன்றியத்தின் தலைவர் யு. பீர் முகம்மட் மற்றும் அதன் செயலாளர் எம்.எம்.மஹ்தி ஆகியோரால் ஒப்பமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அவ்வறிக்கையில்  மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
 
இலங்கையில், இஸ்லாம் எப்படி பரவியது என்பதில் கூட போதிய அறிவு ஞானமில்லாத முஸம்மில், இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று பாரம்பரியத்தைப்பற்றி பேசுவதற்கு முன்பு அது பற்றி பூரண அறிவைப் பெற்றுக்கொள்வது புத்திசாலித்தனமானது.
 
இந்தியாவில் இருந்து இஸ்லாம் வந்தமையால், இந்திய கலாசாரத்தை இலங்கை முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறுவது கூட இஸ்லாமிய ஆடை கலாசாரம் பற்றிய போதிய விளக்கமின்மையைக் காட்டுகிறது.
 
சாதாரணமாக பாடசாலை செல்லும் 12 வயது மாணவனுக்கே, ஒரு முஸ்லிம் பெண்ணின் மறைக்க வேண்டிய பகுதிகள் எவை என்பது தெரிந்த விடயமாகும்.

இவ்வாறு மறைப்பதற்கு மிகப் பொருத்தமாக அபாயா அமைவதுடன் சாதாரண மக்கள் தொடக்கம் வசதியானவர்கள் கூட எளிதாக அணியக்கூடியதாகவும் இலாபகரமானதாகவும் இந்த ஆடை அமைந்துள்ளது.
 
இந் நிலையில் முஸ்லிமாக இருந்து கொண்டு சுதந்திர முன்னணியின் பேச்சாளர் என்ற போர்வையில் முஸ்லிம்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது மட்டுமன்றி, சுதந்திர முன்னணி மீதும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வேலையைச் செய்துள்ளார்.
 
இலங்கையிலும் உலக நாடுகளிலும் சகோதர சமயத்தவர் மத்தியில் முஸ்லிம் பெண்களின் அபாயா ஆடை பற்றி நல்ல அபிப்பிராயமும் வரவேற்பும் வளர்ந்து வரும் இந்த சூழ்நிலையில,; மாற்று மத சகோதர்கள் மத்தியில் முஸ்லிம் பெண்களின் ஆடை பற்றி பிழையான கருத்தை வெளியிட்டு எம் மீது அவர்களின் தப்பான பார்வையை ஏற்படுத்தியதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
 
எனவே, தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முஸம்மில் தனது கூற்றை வாபஸ் பெற வேண்டும் என கிண்ணியா அனைத்து பள்ளிவாசல்கள் ஒன்றியம் கேட்டுக் கொள்கின்றது என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .