2026 மே 08, வெள்ளிக்கிழமை

dd

அரவிந்தவின் வீட்டில் இருந்தே கபில சந்திரசேன சடலமாக மீட்பு

Editorial   / 2026 மே 08 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியிலுள்ள பிரபல கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் இல்லத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டிய, பெட்ரிஸ் பிளேஸில் (Pedris Place) அமைந்துள்ள அரவிந்த டி சில்வாவின் இல்லத்திலேயே இவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரவிந்த டி சில்வா, கபில சந்திரசேனவின் மைத்துனர் ஆவார். கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் அரவிந்த டி சில்வாவின் மனைவி அனுஷ்கா டி சில்வா ஆகிய இருவரும் சகோதரிகள் என்பதால், இரு குடும்பங்களும் மிக நெருங்கிய உறவைக் கொண்டுள்ளன.

முதற்கட்ட விசாரணைகளின்படி, இது ஒரு தற்கொலையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய முறையான விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுமார் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான விமானக் கொள்வனவு ஒப்பந்தத்தின் போது, புரூணையிலுள்ள போலி நிறுவனம் (Shell Company) ஊடாக 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாகக் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கொழும்பு, பார்ன்ஸ் பிளேஸில் (Barnes Place) வசித்து வந்த கபில சந்திரசேன, நேற்று அரவிந்த டி சில்வாவின் இல்லத்திற்கு வந்திருந்ததாகத் தெரியவருகிறது. பிணை நிபந்தனைகளை மீறி, பொருத்தமற்ற ஆள் பிணையாளர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், கொழும்பு பிரதான நீதவான் நேற்றைய தினம் அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பித்திருந்தார்.

இதேவேளை, நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தார். இந்த மரணச் செய்தியைக் கேள்விப்பட்டதும், முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அர்ஜுன ரணதுங்கவும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .