2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

வான்படையின் 75ஆவது ஆண்டு நிறைவு: ஆய்வகங்கள் கையளிப்பு

Editorial   / 2026 மார்ச் 27 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை வான்படை தனது 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, எதிர்காலத் தலைமுறையின் தகவல் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், பாடசாலை மாணவர்களுக்காக சுமார் 75 இலட்சம் ரூபாவிற்கும் அதிக செலவில் நவீன வசதிகளுடன் கூடிய தகவல் தொழில்நுட்ப (IT) ஆய்வகங்களை நிறுவிப் பயன்பாட்டிற்கு வழங்கியுள்ளது.

வான்படைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், வான்படை தகவல் தொழில்நுட்பப் பிரிவினால் இந்தச் சமூக சேவைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. முதற்கட்டமாக, அம்பாறை மங்களாராம மகா வித்தியாலயம் மற்றும் மட்டக்களப்பு கொட்டாய்முனை கனிஷ்ட வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு ஆய்வகங்கள் வழங்கப்பட்டன.

இதன் இரண்டாம் கட்டமாக, நுவரெலியா - நானுஓயா பிரதேசத்தில் அமைந்துள்ள டெஸ்ஃபோர்ட் தமிழ் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப ஆய்வகம் இன்று (2026 மார்ச் 27) திறந்து வைக்கப்பட்டது.

வான்படை மின்னியல் மற்றும் கணினிப் பொறியியல் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் அசித ஹெட்டியாரச்சி தலைமையில் நடைபெற்ற இந்தத் திறப்பு விழாவில், வான்படை அதிகாரிகள், நிதி உதவியாளர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

புதிதாகத் திறக்கப்பட்ட இந்த ஆய்வகம் பின்வரும் நவீன வசதிகளைக் கொண்டுள்ளது:ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கற்றலில் ஈடுபட வசதியாகக் குளிரூட்டப்பட்ட (A/C) பாதுகாப்பான சூழல்.

15 மேசைக் கணினிகள் (Desktop Computers), தடையற்ற மின்சாரம் வழங்கும் UPS அமைப்புகள்,முழுமையான வலையமைப்பு (Networking) வசதிகள் மற்றும் நவீன தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள்.

வான்படைத் தொழில்நுட்ப அதிகாரிகளின் தொழில்முறைத் திறமையுடன் இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. எயார் வைஸ் மார்ஷல் அசித ஹெட்டியாரச்சியின் மேற்பார்வையில், தகவல் தொழில்நுட்பப் பணிப்பாளர் குறூப் கெப்டன் சாணக சூரியாரச்சியின் கண்காணிப்பின் கீழ், பிதுருதலாகல வான்படை முகாம் கட்டளை அதிகாரி குறூப் கெப்டன் இந்திக ஜயசுந்தரவின் தலைமையில் இந்த ஆய்வகத்தின் கட்டுமானப் பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .