2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

அரையிறுதிக்குள் நுழைந்தது இலங்கை

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 07 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகளின் அரையிறுதிப் போட்டிக்கு, இலங்கை அணி தகுதிபெற்றுள்ளது. இங்கிலாந்து அணிக்கெதிரான காலிறுதிப் போட்டியில் இலகுவாக வெற்றிபெற்றே, இலங்கை அணி, அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

மிர்புரின் ஷேரே பங்களா தேசிய விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 184 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அவ்வணி, தொடர்ச்சியாகத் தடுமாறியது. ஒரு கட்டத்தில் 7 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களுடன் தடுமாறிய அவ்வணி, 8ஆவது விக்கெட்டுக்காகப் பகிரப்பட்ட 34 ஓட்டங்களின் துணையோடு, 184 ஓட்டங்களை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் கலும் டெய்லர் 42 (57), பென் கிறீன் 26 (38), சாம் குரான் 25 (35), ஜோர்ஜ் பார்ட்லெட் 25 (58), அணித்தலைவர் பிரட் டெய்லர் 22 (25) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் வனிது ஹசரங்க 3 விக்கெட்டுகளையும் அசித்த பெர்ணான்டோ 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். திலான் நிமேஷ், டமித்த சில்வா, சரித் அசலங்க, கமிந்து மென்டிஸ், ஷம்மு அஷான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

அரையிறுதிக்குத் தகுதிபெற, 185 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றுக் கொண்டது. 8ஆவது ஓவரின் முடிவில், மதியபோசன இடைவேளைக்காக, போட்டி இடைநிறுத்தப்படும் போது, விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்களுடன் இலங்கை காணப்பட்டது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இலங்கை அணி, 35.4 ஓவர்களின் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அதிரடியாக விளையாடிய அவிஷ்க பெர்ணான்டோ 96 பந்துகளில் 95 ஓட்டங்களைப் பெற்றார். தவிர, அணித்தலைவர் சரித் அசலங்க 57 பந்துகளில் 34 ஓட்டங்களையும் கவீன் பண்டார 41 பந்துகளில் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சஹிப் மஹ்மூட், மேசன் கிறேன், டான் லோரன்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக, அவிஷ்க பெர்ணான்டோ தெரிவானார்.

இத்தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதிபெற்றுள்ள நிலையில், இந்தியாவுடன், நாளை மறுதினம் இடம்பெறவுள்ள போட்டியில் மோதவுள்ளது.

நாளை இடம்பெறவுள்ள காலிறுதிப் போட்டியில், பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .