2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

அணியிலிருந்து நீக்கப்பட்ட விதத்தால் காயத்துக்குள்ளான செவாக்

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து 2013ஆம் ஆண்டு நீக்கப்பட்ட இந்தியாவின் நட்சத்திர ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் விரேந்தர் செவாக், அணிலிருந்து நீக்கப்பட்ட விதம், தன்னுடைய மனதைக் காயத்துக்குள்ளாக்கியதாகத் தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற செவாக், முதன்முறையாக, 2013ஆம் ஆண்டு, அணியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.

அணியிலிருந்து நீக்கப்பட்டதை, பத்திரிகைகள் வாயிலாகவே தான் அறிந்ததாகத் தெரிவித்த செவாக், அணித் தேர்வாளர்களாலோ, அணி முகாமைத்துவத்தினாலோ அல்லது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினாலோ, இவ்விடயம் குறித்துத் தனக்கு அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவுக்கான 4 போட்டிகள் கொண்ட அத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் 3 இனிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடியிருந்த செவாக், 27 ஓட்டங்களையே மொத்தமாகப் பெற்றிருந்த நிலையில், அதற்கு முன்னரும் ஓட்டங்களைப் பெறத் தவறியிருந்ததால், அடுத்த 2 போட்டிளுக்குமான குழாமிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர், சர்வதேசப் போட்டிகளில் வாய்ப்பு, அவருக்குக் கிட்டியிருக்கவில்லை.

இந்தியாவின் கிரிக்கெட் வீரர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் விரேந்தர் செவாக், இந்தியாவில் மிகச்சிறப்பாகச் செயற்பட்ட போதிலும், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற இடங்களில் தடுமாறியிருந்தார். தனது கிரிக்கெட் வாழ்வைத் திரும்பிப் பார்க்கும் போது, இந்தியாவுக்கு வெளியே பெற்றுக் கொண்ட சராசரியை அதிகரித்திருக்க வேண்டுமென எண்ணுவதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .