2025 மே 20, செவ்வாய்க்கிழமை

புதிய நிர்வாகத்தெரிவில் அமளி துமளி

பேரின்பராஜா சபேஷ்   / 2017 டிசெம்பர் 26 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - ஏறாவூர் பொதுச்சந்தை வர்த்தகர் நலன்புரிச் சங்கத்தின் புதிய நிருவாகத்தெரிவு, பெரும் அமளி துமளி மற்றும் கைகலப்புக்கு மத்தியில் நடைபெற்றது.

தற்காலிக சந்தை வளாகத்தில் புதிய நிர்வாகத் தெரிவு தொடர்பில் நேற்று (25) மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எம்.எஸ் அலியார் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன், யு. சலாஹுதீன் உப தலைவராகவும் பிஎம். தஸ்தகீர் செயலாளராகவும் எஸ்எம். ஜெமீல் உப செயலாளராகவும் மற்றும் எஸ்கே. அமீன் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

முன்னைய நிர்வாகம், கடந்த பத்து ஆண்டுகளில் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத காரணத்தால் புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டதாகவும் புதிய நிர்வாகம் உத்வேகத்துடன் செயற்படுமெனவும் புதிய தலைவர் எம்எஸ். அலியார் தெரிவித்தார்.

இதற்கிடையே, கடந்த மாதம் ஏறாவூர்- பொதுச்சந்தை நலன்புரி சங்கத்துக்கான புதிய உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டு, கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெயர் பட்டியல் ஒன்றை பகிரங்கமாக அறிவிப்பதற்கென்றே இரண்டு நாள் காலஅவகாச அறிவிப்பில்  இக்கூட்டம் கூட்டப்பட்டது.

பொதுக்கூட்டமின்றி நடைபெற்ற அவ்வாறான  நிர்வாகத்தெரிவு சட்டவிரோதமானதென உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததையடுத்து, கூட்டத்தில் அமளிதுமளி மற்றும் கைகலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, மற்றுமொரு புதிய நிர்வாகத்தைத் தெரிவுசெய்ய சபையில் இணக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எதுஎவ்வாறிருப்பினும், தற்போது நடைபெற்றுள்ள புதிய நிர்வாகத் தெரிவிலும்  பொது அமைப்புகளுக்கான விதிமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படவில்லையென குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படுகிறது.

14 நாட்களுக்கு முன்னர் பொதுக் கூட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்படவேண்டும். இவ்வழைப்பு பொது இடங்களில் காட்சிப்படுத்தப்படவேண்டும். அவ்வாறு பொதுக்கூட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட நிர்வாகமே கலாசார திணைக்களத்தில் பதிவுசெய்யப்படவேண்டும் என்பது பொதுவான  விதியாகும்.

ஆனால், பொதுக்கூட்டமின்றி பெயரிடப்பட்ட பட்டியலொன்றை கலாசார திணைக்களத்தில் பதிவு செய்தமை சட்டவிரோதமானதென இக்கூட்டத்தில் உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

இப்பிரதேச அரசியல்வாதியொருவரின் பின்புலத்தில் இவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாமெனவும் கருதப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X