Suganthini Ratnam / 2016 ஜூன் 12 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாணத்துக்கென தனியான நிதியம் உருவாக்கப்பட வேண்டும் என அம்மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சுகாதாரப் பயிற்சி நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும்; நிகழ்வு மட்டக்களப்பு, திராய்மடுப் பிரதேசத்தில் சனிக்கிழமை (11) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'கிழக்கு மாகாணத்துக்கென தனியான நிதியம் உருவாக்கப்பட வேண்டும். எமது மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்காக புலம்பெயர் அமைப்புகள் மற்றும் புலம்பெயர்ந்த மக்கள் அந்த நிதியத்தின் ஊடாக உதவத் தயாராக இருக்கின்றார்கள். ஆனால், அந்தப் பணம் மத்திய அரசாங்கத்தின் ஊடாக வருவதை விரும்பவில்லை' என்றார்.
'வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டும் என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடுபட்டுக்கொண்டிருந்தாலும், இருக்கின்ற மாகாணத்துக்கு சகல அதிகாரங்களும் பெறப்பட்டு சுயாட்சி அதிகாரம் மாகாணத்தில் இருக்க வேண்டும் என்று ஒன்பது மாகாண சபைகளில் இருக்கும் முதலமைச்சர்களினுள்; முதலாவது முதலமைச்சராக எமது கிழக்கு மாகாண முதலமைச்சர் மிகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 90 சதவீதமான நிதி முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பத்து சதவீதமான நிதியே தமிழ், சிங்கள பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நான் பார்த்தேன். அந்த நிலை இருக்க கூடாது. அந்த நிலை மாறவேண்டும். மூன்று இன மக்களும் வாழும் இந்த கிழக்கு மாகாணத்தில் எங்களுக்குள் பாகுபாடுகள் இருக்க கூடாது. அந்த வகையில் நான் முதலமைச்சரை பாராட்டுகின்றேன். அவரது கிராமிய எழுச்சி திட்டத்திற்கூடாக 105 மில்லியன் அவரது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு கிராமங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு செய்யப்பட்டது. அதாவது 12 கிராமங்கள் அதனூடாக அபிவிருத்திக்காக தெரிவு செய்யப்பட்டது.
ஒவ்வொரு கிராமத்திற்கும் 85 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஐந்து முஸ்லிம் கிராமங்களையும்ஷ ஐந்து தமிழ் கிராமங்களையும் இரண்டு சிங்கள கிராமங்களையும் தெரிவு செய்திருக்கின்றார். அந்த நிலைமை இருக்க வேண்டும். நாங்கள் ஒருக்கொருவர் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும்' என்றார்.
இதேவேளை, இங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், 'கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு இன ரீதியாக நிதியைப் பிரிக்கவில்லை. தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற பாகுபாட்டின் அடிப்படையில்; நிதி பகிர்ந்தளிக்கப்படவில்லை' என்றார்.
'கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் இரா.துரைரட்ணம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களில் ஒரு செய்தியினை வெளியிட்டு இருந்தார். அதில் நான் முஸ்லிம்களுக்கு 90 வீதமாகவும் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் 10 வீதமாக நிதியை பங்கீடு செய்திருக்கின்றேன் என்ற குற்றச்சாட்டை சுமத்தியிருப்பதை பார்த்து கவலையடைந்தேன்.
எனது அiமைச்சின் செயலாளர் மற்றும் பணிப்பாளர் பிராந்தியப்பணிப்பாளர்கள் எல்லோரும் ஒன்று கூடித்தான் நிதியைப் பிரித்து பங்கிடுவோம்.
ஆலோசனை செய்துதான் நிதியை ஒதுக்கீடு செய்வோம். அதிலும் இம்முறை கிழக்கு மாகாணத்துக்கு 690 மில்லியன் ரூபாய் நிதியினை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்துள்ளனர். இந்த நிதியானது மாகாண அபிவிருத்தி விசேட நிதியின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 260 மில்லியன் ரூபாயும் திருகோணமலை மாவட்டத்துக்கு 176 மில்லியன் ரூபாயும் கல்முனை பிராந்திய சுகாதாரப்பிரிவுக்கு 136 மில்லியன் ரூபாயும் அம்பாறை பிராந்தியத்துக்கு 110 மில்லியன் ரூபாயும் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதி எவ்வாறு பிரிக்கப்பட்டது என்றால் மக்களின் தொகைக்கு ஏற்ப சரியாக அந்த நிதியினை இந்த கிழக்கு மாகாணத்திற்கென நான் ஒரு அமைச்சர் என்ற வகையில் சரியாக நின்று பிரித்துள்ளேன். அதில் தவறு இருக்குமாக இருந்தால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் நிரூபிக்க வேண்டும்.
நாம் எப்படி நிதிகளை பிரித்தோம் என எனது அமைச்சின் மாகாண பணிப்பாளர் முருகானந்தம் மற்றும் எமது அமைச்சின் செயலாளர் கருணாகரன் ஆகியோருக்கும் தெரியும். அவர்கள் இந்த நிதியினை பகிர்ந்தளிக்கும்போது இருப்பவர்கள் என்பதால் அவர்களுக்கு தெரியும்' என்றார்.
45 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
4 hours ago