2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'நல்லாட்சியை உருவாக்குவதில் சிறுபான்மைச் சமூகம் பங்களிப்புச் செய்துள்ளது'

Suganthini Ratnam   / 2016 ஜூன் 05 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

நல்லாட்சியை உருவாக்குவதில் காத்திரமான பங்களிப்பை சிறுபான்மைச் சமூகம் வழங்கியுள்ளது. இந்த ஆட்சியில் சிறுபான்மை மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் தாம் முன்னின்று செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் சனிக்கிழமை (04) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'இந்த நாட்டில் இன நல்லிணக்கத்தை, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த நாங்கள் விரும்புகின்றோம். பெரும்பான்மை மக்களுடன் இணைந்து வாழ விரும்புகின்றோம். ஆனால், இந்த நாட்டில் உள்ள பேரினவாதிகள் மீண்டும் இனவாதத்தை தூண்ட முனைகின்றனர்' என்றார்.

'தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிர்வாகத்தில் மட்டுமே ஆளுநர்களின் தலையீடுகள் அதிகமாகவுள்ளன. இலங்கையில் உள்ள வேறு மாகாணங்களில் இவ்வாறான தலையீடுகள் இல்லாத நிலைமையே காணப்படுகின்றது.
இந்த நாட்டில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த முதலமைச்சர் ஒருவர், பாதுகாப்பு அதிகாரியை ஏசினார் என்ற காரணத்துக்காக அதைப் பேரினவாதிகள் பூதாகரமாக்குவது இனவாதச்  செயற்பாடாகவே நோக்க வேண்டியுள்ளது. இந்த நல்லாட்சியானது நல்லாட்சியாகவே தொடர்ந்து இருக்க வேண்டும். இந்த நாட்டில் அனைவரும் இணைந்து வாழ வேண்டும் என்பதையே விரும்புகின்றோம்' எனவும் அவர் மேலும் கூறினார்.

'கிழக்கு முதலமைச்சர் தொடர்பான பிரச்சினையை ஆராய உடனடியாக கூட்டத்தைக் கூட்டிய பிரதமருக்கு தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையை ஆராய இதுவரையில் கூட்டத்தைக் கூட்ட முடியாமல் போன காரணம் என்ன? எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X