2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பட்டதாரி பயிலுனர் நியமனத்தில் அரசியல் பாகுபாடு இல்லை:ஹிஸ்புல்லா

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 18 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கும் விடயத்தில் எந்தவிதமான அரசியல் பாகுபாடு எதுவும் காட்டப்படவில்லை. கட்டம் கட்டமாக பட்டதாரி பயிலுனர்கள் ஒவ்வொரு அமைச்சின் கீழும் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கு நிரந்தர நியமன்ஙகள் வழங்கப்படும் என சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

மண்முனை பிரதேச செயலக பிரிவிலுள்ள பட்டதாரி பயிலுனர்கள் சிலருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கி வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மேற்கண்டவாறு கூறினார்.

இன்று காலை மண்முனைப்பற்று பிரதேசத்திலுள்ள விதாதா நிலையத்தில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி வாசுகி அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நியமனங்கள் வழங்கும் வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா கூறுகையில்,

'பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் பட்டதாரி பயிலுனர்களை ஆட்சேர்ப்பதற்கான நிகழ்ச்சித்திட்டத்திற்கமைவாக இன்று சில பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டு அவர்கள் பொருளாதார அமைச்சின் கீழ் உள்வாங்கப்படுகின்றனர்.

இதேபோன்று ஏனைய பட்டதாரி பயிலுனர்களும் அடுத்தடுத்த கட்டங்களில் ஒவ்வொரு அமைச்சின் கீழும் உள்வாங்கப்பட்டு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இதையிட்டு எந்தவொரு பட்டதாரி பயிலுனரும் கவலையடையத் தேவையில்லை.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, தொழில் அமைச்சு, எனது சிறுவர் மகளிர் விவகார அமைச்சு என இவ்வாறு பல அமைச்சின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பட்டதாரி பயிலுனர்கள் அனைவருமே உள்வாங்கப்பட்டு அவர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

அதில் முதற்கட்டமாகவே பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இந்த பட்டதாரி பயிலுனர்கள் உள்வாங்கப்பட்;டு அவர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

நிரந்தர நியமனம் பெறும் பட்டதாரிகள் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களையும் அபிவிருத்தி நடவடிக்கைகளை சரிவர செய்கின்றவர்களாக இருக்க வேண்டுமே தவிர அரசாங்க வேலைத்திட்டங்களை விமர்சிக்கின்றவாக்ளாக இருக்கக்கூடாது.

தனிப்பட்ட ஒவ்வாரு குடும்பங்களினது வருமானத்தை அதிகரித்து அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த இந்த நிரந்தர நியமனம் பெறும் பட்டதாரிகள் முயற்சிக்க வேண்டும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வேலைத்திட்டங்களை கிராம மட்டத்தில் நடைமுறைப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும்.

மதுபானம்  பாவிப்பவர்களை மதுபான பாவனையிலிருந்து விடுபடச்செய்து அவர்களை சேமிப்பவர்களாகவும் பொருளதார ரீதியாக முன்னேற்றுபவர்களாகவும் இருக்க வேண்டும் என அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட திட்மிடல் பணி;பபாளர் இரா.நெடுஞ்செழியன் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இதன் போது இங்கு 36 பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .