2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

முன்னாள் முதலமைச்சரால் மட்டக்களப்பு மாவட்ட மேச்சல் தரை விவகாரத்துக்கு தீர்வு

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 19 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினைக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தனால் உடனடித் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பாகங்களிலும் உள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் காலங்காலமாக மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கான மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினைக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் விஜயம் மேற்கொண்டார்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் காலங்காலமாக கால்நடைகளை மேய்த்து வந்த குறிப்பிட்ட சில இடங்களுக்கு அவர்கள் செல்ல முடியாத ஒரு நிலை ஏற்பட்டிருந்தது.

இது தொடர்பில் குறித்த கால்நடை வளர்ப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களது கையொப்பம் இடப்பட்ட மகஜர்களை மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான துரைரெட்ணம், துரைராஜசிங்கம் ஆகியோரிடம் கையளித்திருந்தார்கள்.

குறித்த மகஜர் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எந்தவொரு உறுதியான பதிலையும் வழங்காத பட்சத்தில், முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் கால்நடை வளர்ப்பாளர்கள் மகஜரது பிரதி வழங்கி அதற்கான தீர்வை பெற்றுத் தரும்படி கோரியிருந்தார்கள்.
இது தொடர்பில் ஆராய்ந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் உரிய அதிகாரிகளுடன் பேசி குறித்த கால்நடை வளர்ப்பாளர்கள் கால்நடைகளை மேய்ப்பதற்காக கொண்டு செல்கின்ற இடங்களான மட்டக்களப்பின் எல்லையான மாந்திரி ஆறு உள்ளடங்கலாக மயிலத்தமடு, பாலவெட்டுவான், மாதவளை போன்ற இடங்களுக்கு நேரடியாக சென்று அதிகாரிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் சகிதம் சென்று உடனடியாக அப் பிரதேசங்களில் வழமை போன்று தங்களது கால்நடைகளை மேய்ப்பதற்கான அனுமதியினை பெற்றுக் கொடுத்தார்.

இதனால் மிகவும் சந்தோசமடைந்த கால்நடை வளர்ப்பாளர்கள் மியான்குளம் 9ஆம் கட்டையிலுள்ள பாற்பண்ணை வளாகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு தொடர்ந்து இது தொடர்பாக எழுகின்ற பிரச்சினைகளுக்கு முன்னாள் முதல்வர் அவர்களே முன்னின்று எங்களுக்கு செயலாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்கள்.

இந்த களவிஜயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் உதவி அரசாங்க அதிபர், மாவட்டசெயலகத்தின் காணித் திட்டமிடல் அதிகாரி திருமதி ஈ.குகதா, கிரான் பிரதேச செயலகத்தின் காணி அதிகாரி, கிராம சேவையாளர் குருநாதன், கோறளைப்பற்று பிரதேச பபையின் தவிசாளர் உதயஜீவதாஸ், செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.வினோத், வவுணதீவ பிரதேச சபையின் தவிசாளர் கா.சுப்பிரமணியம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எ.சி.கிருஸ்ணானந்தராஜா, கால்நடை வளப்பாளர்கள் சங்கப் பிரதிநிதிகள், பாற்பண்ணையாளர்கள் சங்க பிரதிநிதிகள் உட்பட விவசாயிகளும் கலந்து கொண்டார்கள்.





  Comments - 0

  • thurai Friday, 19 October 2012 02:28 PM

    மாகாணசபை உறுப்பினர் கே.துரைராசசிங்கம் அவர்கள் 14.10.2012 அன்று தரவை இராணுவ முகாம் மேஜரை சந்தித்து மயிலதகல் வரை சென்று அத்துமீறியோரையும் சந்தித்து கால்நடை வளர்ப்பாளர்கள் அவ்விடம் செல்வதற்கு ஏட்பாடு செய்திருந்தார். மேலதிகமாக சட்ட நடவடிக்கை சம்பந்தமாகவும் ஆலோசனை சொல்லி இருந்தார். முன்னாள் முதல்வர் தாமதப்படுத்தி தான் செய்ததாய் காட்டியுள்ளார். வாழ்க அவர் பணி...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .