2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஏறாவூர் பொலிஸ் நிலையம் ஒரு மரக்காலையாக மாறியிருக்கின்றது: ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 20 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)


கடந்த ஒரு வருட காலத்தில் ஏறாவூர் பொலிஸ் நிலையம் ஒரு மரக்காலையாக மாறியிருக்கின்றது. சுமார் இருபது இலட்ச ரூபாய் பெறுமதியான மரங்கள் - மரக்கடத்தல் காரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன என ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி காஞ்சன கொடகும்புர தெரிவித்தார்.

ஏறாவூர் நகர வர்த்தகர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

ஏறாவூர் பொலிஸாரின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஏறாவூர் நகர பிதா அலிஸாஹிர் மௌலானா, நகரசபை உறுப்பினர்கள், வர்த்தகர் சங்கப்பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஏறாவூர் நகரை பாதுகாப்பானதாகவும் அழகானதாகவும் நம்பிக்கையானதாகவும் வைத்துக் கொள்வதோடு இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் வழி முறைகள் பற்றி தொடர்ந்து விளக்கமளித்த பொலிஸ் பொறுப்பதிகாரி 'கள்ள மரக்கடத்தல் காரர்களிடமிருந்து தொடர்ந்து மரங்களைக் கைப்பற்றி வருவதால் ஏறாவூர் பொலிஸ் நிலையம் ஒரு மரக்காலையாக மாறிவிட்டிருக்கின்றது.

இவ்வாறு அழிக்கப்படும் மரங்கள் இந்த ஊரில் மழை பெய்விக்கும் உயிர்நாடிகள். அவை எமது இளஞ் சந்ததியைப் பாதுகாக்கும் இயற்கை வளங்கள். இந்த இயற்கை வளங்களை ஒரு சில வியாபாரிகள் தமது சுயலாபமும் சொகுசு வாழ்க்கைக்காகவும் அழித்து நாசம் பண்ணுகிறார்கள். இவற்றை கண்ணை மூடிப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்து விட முடியாது.

சூழலை மாசுபடுத்தி இயற்கை வளங்களை நாசம் செய்பவர்களுக்கெதிராக நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். கொள்ளைச் சம்பவங்களை மட்டும் தடுத்து நிறுத்துவது மட்டும் பொலிஸாரின் கடமையல்ல. மக்களின் உடல் நலம், ஆரோக்கியம், விபத்து, நீதி எல்லாவற்றையும் நாங்கள் கவனிக்க வேண்டியிருக்கின்றது. சட்டத்தை மீறி மக்களின் இயல்பு வாழ்க்கைக்குக்கும், இயற்கை வளங்களுக்கும் குந்தகம் விளைவிக்கும் எவராயிருந்தாலும் பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பார்கள்' என்று கூறினார் ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி காஞ்சன கொடகும்புர.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .