2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

ஹோட்டல் முகாமைத்துவ பயிற்சிப் பாடசாலை அமைத்தல் தொடர்பில் கலந்துரையாடல்

Super User   / 2013 ஜனவரி 23 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹனீக் அஹமட்


மட்டக்களப்பில் ஹோட்டல் முகாமைத்துவ பயிற்சிப் பாடசாலை ஒன்றை அமைப்பது குறித்தும் பாசிக்குடா, அருகம்பே, நிலாவெளி போன்ற இடங்களில் சுற்றுலா தகவல் நிலையங்களை அமைப்பது தொடர்பாகவும் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் தலைமையில் ஆராயப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வது குறித்து ஆராயும் விசேட கூட்டமொன்று கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் இன்று புதன்கிழமை திருகோணமலையிலுள்ள சுற்றுலாத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்திலேயே மேற்படி விடயங்கள் உள்ளிட்ட சுற்றுலாத்துறை தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வது குறித்து ஆராயும் மேற்படி கூட்டத்தில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தமது யோசனைகளை முன்வைத்தனர்.

இக் கூட்டத்தில், கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு தடையாகவுள்ள விடயங்கள் குறித்தும் அதனை நீக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டன.

குறிப்பாக, சுற்றுலாத் தளங்களான கடல் பிரதேசங்களின் சுற்றாடல் சுத்தம் பேணுதல், கழிவுப் பொருட்களை அகற்றுதல் தொடர்பில் கருத்துக்கள் பரிமாற்றப்பட்டதோடு, ஹோட்டல் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும் இங்கு அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இதேவேளை, சுற்றுலாப் பகுதிகளில் போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை தடையின்றி ஏற்படுத்துதல் குறித்தும் ஆராயப்பட்டது. 

இதன்பேது, மட்டக்களப்பை மையமாக கொண்டு - அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களை இணைத்து மட்டக்களப்பில் ஹோட்டல் முகாமைத்துவ பயிற்சிப் பாடசாலை ஒன்றை அமைப்பது தொடர்பாகவும் - பாசிக்குடா, அருகம்பே, நிலாவெளி, போன்ற இடங்களில் சுற்றுலா தகவல் நிலையங்களை அமைப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.   

இக்கூட்டத்தில், மாகாண சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் கே. பத்மநாதன், அமைச்சின் ஆலோசகர் சமந்த, திட்டமிடல் பணிப்பாளர் டாக்டர் ஞானசேகர், இலங்கை சுற்றுலா வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம். ஜௌபர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் அதிகமானோரை கிழக்கு மாகாணத்திற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வகையிலேயே கிழக்கு மாகாண அமைச்சு இவ்வாறான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா துறையின் அபிவிருத்தி தொடர்பில் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஸவின் அனுசரனையுடன் கிழக்கு மாகாண  விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


                                  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .