2026 மே 07, வியாழக்கிழமை

கோறளைப்பற்று தெற்கு பிரதேச சபை உருவாக்கத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு தனிநபர் பிரேரணை

Menaka Mookandi   / 2013 ஜூன் 14 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சுமூகமான முறையில் உடன்பாடு காணும்வரை கோறளைப்பற்று தெற்கு (கிரான்) சபை உருவாக்கத்தினை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறு கேட்டு எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபை அமர்வில் தனிநபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பிர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

அது தொடர்பான தனிநபர் பிரேரணையை முன்கூட்டியே அனுப்பி வைத்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு (கிரான்) என பெயர் குறிப்பிடப்படும் புதிய பிரதேச சபை உருவாக்கம் சம்பந்தமாக மட்டக்களப்பு மாவட்டஉள்ளூராட்சி உதவி ஆணையாளரினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.  

மேற்படி அறிவித்தலின் பிரகாரம் கோறளைப்பற்றுமேற்கு (ஓட்டமாவடி) பிரதேச சபையின் கீழ் தற்போது பரிபாலனத்திற்கு உட்பட்ட சில கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக எல்லைகளை தீர்மானிக்கவும் ஏற்பாடாகியுள்ளது.

2002ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கோறளைப்பற்று தெற்கு (கிரான்), கோறளைப் பற்றுமத்தி (வாழைச்சேனை) ஆகிய இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளும் அதன் எல்லைகள் தீர்மானிக்கப்படாமல் நீண்டகாலமாக இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த காலங்களில் மேற்கூறப்பட்ட இரண்டு பிரதேசங்களுக்கும் தனியான பிரதேச சபைகள் அமைக்கப்பட வேண்டும் என்று எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு இரு சமூகத்தினடத்திலும் ஒருமைப்பாடு ஏற்படவில்லை. இவ்வாறான பின்னணிகளைக்கொண்ட நிலையில் தற்போதைய அறிவிப்பினால் சமூகங்களுக்கு இடையில் பிரச்சினைகள் தோன்ற வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன என்பதனை சபைக்கு தெரியப்படுத்துகின்றேன்.

மேற்குறித்த முரண்பாடுகள் சுமூகமான முறையில் உடன்பாடு காணும்வரை கோறளைப்பற்று தெற்கு (கிரான்) சபை உருவாகத்தினை தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கவும். இதற்கான அறிவித்தல்களை உரியவர்களுக்கு உடனடியாக வழங்குமாறு இச்சபையை கேட்டுக்கொள்கின்றேன்' என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .