2025 மே 03, சனிக்கிழமை

ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளராக மீண்டும் உதயஸ்ரீதர்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 16 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று செங்கலடி  பிரதேச செயலாளராக ஏற்கெனவே கடமையாற்றிய யூ.உதயஸ்ரீதர்  இன்று  புதன்கிழமை (16)  தனது கடமையை மீண்டும் பொறுப்பேற்றுள்ளதாக  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் உத்தரவுக்கு  இணங்க இவருக்கான  நியமனக் கடிதம் மீண்டும் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இது இவ்வாறிருக்க, ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதரின் இடமாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு அப்பிரதேச மக்கள் கடந்த திங்கட்கிழமை (14) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்; தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனிடம் கையளித்திருந்தனர்.

இருப்பினும்,  ஏறாவூர்ப்பற்று செங்கலடிப் பிரதேச செயலாளராக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் பணிபுரிந்த மாணிக்கவாசகம் தயாபரன் அன்றையதினமே (14) தனது கடமையை பொறுப்பேற்றிருந்தார். 

மேற்படி பிரதேச செயலகத்துக்கான பிரதேச செயலாளராக ஏற்கெனவே இருந்த யூ.உதயஸ்ரீதர் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் உத்தரவுக்கு இணங்க, மாவட்ட செயலகத்துக்கு மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்தும் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகணசபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனின்; கருத்துக்கு மதிப்பளித்தும் யூ.உதயஸ்ரீதரரின்  இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் செல்லம் மோகன் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஏற்கெனவே உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் பணிபுரிந்துவந்த மா.தயாபரன் தற்காலிகமாக அதே அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.    

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X