2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

குறைவான வாக்குகளை அளித்தால் இராஜினாமாச் செய்வேன்: பசீர்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 31 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக அளித்த வாக்குகளை விடவும் குறைவான வாக்குகளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அளிப்பார்களாக இருந்தால், தனது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பொறுப்பை இராஜினாமாச் செய்வதாக ஊக்குவிப்பு  உற்பத்தித்திறன் விருத்தி அமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் 03 மாடிகளை கொண்ட நிர்வாகக் கட்டடத்திற்கான அடிக்கல்  இன்று வியாழக்கிழமை (31) நாட்டப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'இரண்டுமுறை ஜனாதிபதியாக இருந்த ஒருவர் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக வருவது உறுதி. அதில் நாமும் பங்காளர்களாக இணைந்துகொள்ள வேண்டும்.

தேர்தலில் எதிர்த்து வாக்களித்துவிட்டு, அவர் வெற்றி பெற்றதன் பின்னர் மீண்டும் அவரிடம் சென்று அமைச்சுப் பொறுப்பை பெற்று என்ன முகத்துடன் எமது பகுதிக்கு அபிவிருத்திக்கான நிதியை கேட்பது. அதனால்தான் கூறுகிறேன் கடந்த காலங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளை விடவும் குறைவான வாக்குகள் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களால் அளிக்கப்படுமாக இருந்தால், எனது அமைச்சு பதவியை  இராஜினாமாச் செய்வேன்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியை மாற்றலாம் என்ற நம்பிக்கை இருந்தால் மாத்திரம்தான் அவருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஒற்றுமைப்பட்டு ஜனாதிபதிக்கு எதிராக வாக்களித்தால் மாத்திரம்தான் தோற்கடிக்க முடியும் என்றால் நாம் ஒற்றுமைப்பட்டு அவரை தோற்கடிக்க முயற்சிக்க வேண்டும்.

மாறாக, மட்டக்களப்பில் உள்ள முஸ்லிம்கள் மாத்திரம் எதிர்த்து வாக்களிப்பதால் அவரை தோற்கடிக்க முடியாது. 

மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்காமல் அவரை தோற்கடித்து வெல்ல வேண்டும். அல்லது அவர் வெல்வார் என்றால், அவருக்கு வாக்களித்து வெல்ல வேண்டும். எந்த வெற்றி பொருத்தமாக இருக்குமோ, அதன்படி நடப்பவர்களாக நாம் இருக்க வேண்டும்.

நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களின் கூடுதலான வாக்குகளை பெற்று மீண்டும் ஜனாதிபதியாக அவர் வருவது உறுதி. அவ்வாறு அவர் ஜனாதிபதியாக வரும்போது அந்த வெற்றியில் பங்காளர்களாக இல்லாமல் நாம் இருப்போமானால், நட்டமடையப் போவது வாக்களிக்காத முஸ்லிம்கள்தான.; மஹிந்த ராஜபக்' அல்ல' என்றார்.

இந்த நிகழ்வில் கௌரவ அதிதியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  கல்குடாத்தொகுதி அமைப்பாளர் எஸ்.ஏ.றபீல், ஓட்டமாவடி கோட்டக் கல்வி அதிகாரி எம்.எஸ்.கே.றகுமான், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ஜே.எம்.முஸ்தபா, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எல்.ஜூனைட், ஐ.ரீ.அஸ்மி, எஸ்.ஏ.அன்வர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த  மூன்று மாடிக் கட்டிடத்திற்கு முதலாம் கட்டமாக கல்வி அமைச்சினால் ஒரு கோடி நாற்தொரு இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.




  Comments - 0

  • வை.எல்.மன்சூர் Thursday, 31 July 2014 11:42 AM

    வாழ்த்துக்கள்-உண்மைகள்..............................

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X