2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஆசிரியர் இடமாற்றத்துக்கு வேலுகுமார் எம்.பி கண்டனம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி மாவட்டத்துக்கு உட்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த 16 ஆசிரியர்களுக்கு திடீரென இடமாற்றம் வழங்கப்பட்டமைக்கு, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கண்டம் தெரிவித்துள்ளார்.  

மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் தமிழ் பிரிவு அதிகாரிகள், பொறுப்புடனும் பொதுநலனுடனும் செயற்படவேண்டும் என்பதுடன் சொந்த விருப்பு, வெறுப்புகளை புறந்தள்ளிவைத்துவிட்டு நீதியான முறையில் தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

கண்டி மாவட்டத்திலுள்ள தமிழ் புத்திஜீவிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி அலுவலகத்தில், இன்று (30) நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்துரைத்த அவர்,

குறிப்பாக பழிதீர்க்கும் நோக்கிலும் சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காகவும் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவதாகவும் கண்டி மாவட்டத்திலுள்ள ஆசிரியர்களே இதனால் பெரிதும் பாதிக்கப்படுவதாக  முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் சுட்டிக்காட்டியதுடன், அண்மையில்கூட தனிப்பட்ட பிரச்சினை, பகைமை காரணமாக, கண்டி மாவட்டத்திலுள்ள ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

“மலையகத்தில் சமூகமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு கல்வியே எஞ்சியுள்ள பலம்பொருந்திய ஆயுதமாகும். அதனை சமூகப்பொறுப்புடன் அதிகாரிகள் கையாளவேண்டும். குறிப்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை ஆக்கத்துக்காக பயன்படுத்த வேண்டுமே தவிர, ஒருபோதும் அழித்தலுக்காகப் பயன்படுத்த வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டார்.

பாடசாலைகளில் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் தீடீர் இடமாற்றங்களானவை மாணவர்களின் கல்வி நடவடிக்கையிலும் பெரும் தாக்கத்தை செலுத்தும் என்பதுடன், அதிகாரிகளின் தன்னிச்சையான தீர்மானங்களால் பாதிக்கப்பட்டுள்ள கண்டி மாவட்ட ஆசிரியர்களுக்கு நீதி என்ற நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், இனியும் இவ்வாறானச் செயற்பாடுகள் இடம்பெறாத வகையில் நடந்துகொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இவ்விவகாரம் தொடர்பில் உரிய தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் தயாராகி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

மத்திய மாகாண சபையின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால் ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதியாகக் கருதப்படும் ஆளுநரின் அதிகாரத்தின் கீழ்தான் ஆட்சி, நிர்வாகப் பொறிமுறைகள் இருக்கின்றன என்றும் மாகாண அமைச்சரவையும் கலைந்துள்ளதால் அமைச்சுகளின் செயலாளர்களும் திணைக்களங்களின் பிரதானிகளுமே, அதிகாரம் படைத்தவர்களாக இருக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

எனவே, தீர்மானங்களை எடுக்கும்போது அரசியலுக்கு அப்பால் சென்று சமூகத்தின் நலனையே முன்னிலைப்படுத்தி செயற்படவேண்டும் என்றும்  எனினும், மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் தமிழ்ப் பிரிவுக்குப் பொறுப்பாகவுள்ள சில அதிகாரிகள், இவ்வாறு செயற்படுகின்றனரா என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்ததுடன், ஏனெனில் அவர்களுக்கு எதிராக முறைப்பாடுகள் குவிந்த வண்ணமுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .