2026 மார்ச் 09, திங்கட்கிழமை

டிக்கோயா விவகாரத்தில் அதிரடி திருப்பம்: 24 மணிநேரம் கெடு

Editorial   / 2026 மார்ச் 08 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கிருஷ்ணா

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் உடலுக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் அவமதிப்பு மற்றும் துஷ்பிரயோக விவகாரம் மலையகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி. தலைமையிலான குழுவினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று ஞாயிற்றுக்கிழமை (08)  அன்று இடம்பெற்றது.

 ஞாயிற்றுக்கிழமை (08)  அன்று முன்னெடுக்கப்படவிருந்த அமைதிவழிப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட இ.தொ.கா முக்கியஸ்தர்கள் நேரடியாக பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்குச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

"இந்தச் சம்பவம் தொடர்பாக இன்னும் 24 மணிநேரத்திற்குள் தெளிவான பதிலளிப்பதாக பொலிஸ் அத்தியட்சகர் உறுதியளித்துள்ளார். சுகாதார அமைச்சினால் முறையான விளக்கம் அளிக்கப்படாத பட்சத்தில், அவர்களுக்கு எதிராக நீதிமன்றினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது."

"குற்றச்சாட்டுக்கு உள்ளான மூவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு ஆளுந்தரப்பு எம்.பி. கூறுகிறார். இது எந்த வகையில் நியாயம்? அவர்கள் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்."

"இவ்வாறான ஒரு கொடூரமான சம்பவம் நாட்டின் வேறு ஒரு பகுதியில் நடந்திருந்தால் அதன் தாக்கம் எப்படியிருந்திருக்கும்? ஜனாதிபதி இந்த விவகாரத்தில் நேரடியாகக் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியைப் பெற்றுத்தர வேண்டும்."

"இது தேர்தல் காலம் கிடையாது. அநீதிக்கு எதிராக உண்மைத்தன்மையை வெளிப்படுத்துமாறு கேட்பது எப்படித் தவறாகும்? அமைதிவழிப் போராட்டத்திற்குத் தடை விதித்தது ஏன்?" எனக் கேள்வி எழுப்பிய அவர், திங்கட்கிழமை (09) வரை பொறுத்திருப்பதாகத் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .