Editorial / 2026 மார்ச் 04 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

டிக்கோயா - கிளங்கன் வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதியொருவரின் உடல் பிணவறையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவமானது, இந்த நாட்டில் உயிரிழந்த பெண்களுக்குக்கூட பாதுகாப்பு இல்லாத நிலையை உறுதிப்படுத்துவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை(4) அன்று சுகாதார அமைச்சரிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
"கிளங்கன் வைத்தியசாலையில் உயிரிழந்த 23 வயதுடைய யுவதியொருவரின் உடல் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த போது, அங்கிருந்த மூவரால் அந்த உடல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற செயல் தொடர்பில் சுகாதார அமைச்சர் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாகக் கைது செய்து, பொலிஸாரிடம் ஒப்படைத்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உயிருடன் இருப்பவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதைப் போன்றே, உயிரிழந்தவர்களின் உடல்களுக்கும் கண்ணியமான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும். உயிரிழந்த பெண்களுக்கும் இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லையென்றால் நாம் எங்கே செல்வது?" என அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த ஆளுங்கட்சி பிரதம கொரடாவும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, "இந்தச் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை நடத்தி, அதன் முழுமையான விபரங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றேன்" என உறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .