2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

'எட்கா' வின் உள்ளக இரகசியத்தை பிரதமர் வெளியிட வேண்டும்

Sudharshini   / 2016 மார்ச் 07 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

„எட்கா... உடன்படிக்கையின் உள்ளக இரகசியத்தை பிரமதர் ரணில் விக்கிரமசிங்க வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும். இது தொடர்பாக நாட்டின் அனைத்து கட்சிகளும் இணைந்து கலந்தாலோசிக்க வேண்டும். இதைவிடுத்து திறந்த பொருளாதார கொள்கை என்ற பெயரில் நமது நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியை வெளிநாடுகள் மழுங்கடிப்பு செய்வதற்கு நாம் ஒருபோதும் இடம்கொடுக்க மாட்டோம்' என தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டி.லால்காந்த தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உடன்படிக்கை கைச்சாத்திடப்படாமல் இருப்பது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க  'எட்கா'  உடன்படிக்கையை கைச்சாத்திட்டே தீருவேன் என கங்கணம் கட்டுவது ஏன்?' எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'இந்திய அரசாங்கத்துக்கு நாம் என்றும் எதிரி இல்லை.  ஆனால், இந்தியா, நமது நாட்டில் முன்னெடுக்கும் ஒரு சில முன்னெடுப்புக்களுக்குதான், நாம் எதிராக செயற்பட வேண்டியுள்ளது. கொழும்பு காலிமுகத்திடலில் நம் நாட்டவர் விடும் பட்டம்கூட சீனாவினால் தயாரிக்கப்பட்டது. இது வேடிக்கையான விடயம். நமது நாட்டின் தொழில்நுட்ப திறனை ஊக்குவிக்காமல் அனைத்தையும் வெளிநாடுகள் ஊடாக அனுபவிக்க பார்க்கும் அரசின் கொள்கையை நாம் பரிசீலனை செய்ய வேண்டும்.

நமது நாட்டின் உற்பத்திகளுக்கு மதிப்பளிக்காது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு மதிப்பளிக்கும் இந்த புதிய அரசாங்கம், நாட்டில் எதனை எதிர்பார்க்கின்றது. இதனை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்' என்றார்.

இதேவேளை அவர், 'உள்ளூர் விவசாய உற்பத்தி வேண்டாம், உள்ளூர் தொழில்நுட்பம் வேண்டாம் என்ற புதிய அரசாங்கத்தின் முன்னெடுப்புக்களானது,  ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் விடுபட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையை புதுப்பிக்கும் முயற்சியாகவே உள்ளது. எதுவாக இருந்தாலும்சரி நாட்டுக்கும், நாட்டின் மக்களுக்கும் பங்கம் விளைவிக்கும் எந்தவோர் வெளிநாட்டு உடன்படிக்கைக்கு நாம் விரோதம் தெரிவிப்போம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .