2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

நியமன கடிதங்கள் கிடைக்கவில்லையென குற்றச்சாட்டு

Princiya Dixci   / 2015 மே 07 , பி.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

மலையக ஆசிரிய உதவியாளர்கள் நியமனம் இன்று வெள்ளிக்கிழமை (8) வழங்கப்படவுள்ள நிலையில், அழைப்பிதழ் கடிதங்கள் இதுவரை கிடைக்கவில்லை என சப்ரகமுவ மாகாணத்திலிருந்து மலையக ஆசிரிய உதவியாளர் பதவிக்கு விண்ணப்பித்து, நேர்முக பரீட்சையின்போது தகுதிபெற்ற விண்ணப்பாதாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மலையக ஆசிரியர் உதவியாளர் நியமனம் ஆரம்பத்திலிருந்தே முறையாக நடத்தப்படவில்லை என சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரிகள் மற்றும் இரத்தினபுரி மாவட்ட புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பெருந்தோட்டப் பாடசாலைகளை மையப்படுத்தி 3,024 பேருக்கு கடந்த 28ஆம் திகதி நியமனம் வழங்கப்படுவதாக அறிவித்து பின்பு அது 30ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது. அதுவும் சாத்தியப்படாததால் இன்று வெள்ளிக்கிழமை (8) நியமனம் வழங்கப்படுவதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.

இன்றைய நிகழ்வின் போது 1,668 பேரே முதலில் நியமனம் பெறவுள்ளனர் என்று  கல்வி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. எது எவ்வாறாயினும், இதனை எவ்வகையிலும் ஏற்றுகொள்ள முடியாது. முதலில் 1,500 பேருக்கு மட்டும் நியமனம் வழங்கபடவுள்ளதாக கூறுவது மலையக தமிழர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் செயலாகும். இது குழந்தைகளை ஏமாற்றி வாழைப்பழம் ஊட்டும் கதையாக மாறிவிட்டது என விண்ணப்பதாரிகளும் புத்திஜீவிகளும் கூறுகின்றனர்.

மேற்படி நியமனத்துக்கு கடிதம் கிடைக்காத அநேகமானவர்கள், புதன்கிழமை (6) கல்வி அமைச்சுக்கு சென்று அதுதொடர்பாக கேட்டபோது, அங்கு கடமைகளில் இருந்த அதிகாரிகள் உறுதியான பதிலை வழங்காததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர். மலையக ஆசிரியர் உதவியாளர் நியமனத்தில் மட்டும் இவ்வாறான அசமந்தபோக்கு இடம்பெறுவது மலையக தமிழர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

3,024 பேருக்கு ஒரே தடவையில் குறித்த திகதியில் நியமனம் வழங்க முடியாத அரசாங்கம் எப்படி மலையக தமிழ் மக்களின் ஏனைய பிரச்சினைகளை தீர்க்கப்போகின்றது என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. மலையக ஆசிரியர் உதவியாளர் நியமனத்துக்கு தெரிவு செய்யப்பட்ட அனைவருக்கும் ஒரே தடவையில் நேர்மையான முறையில் நியமனம் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோருகின்றனர்.

இதுகுறித்து ராஜாங்க கல்வி அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் சரியான முடிவு எடுக்காவிட்டால் நாம் அனைவரும் வீதிக்கு இறங்கி போராட்டம் செய்வோம் என்று மேற்படி விண்ணப்பதாரிகளும் இரத்தினபுரி மாவட்ட புத்திஜீவிகளும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .